தைப்பூசம்..கதிர் அறுக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர்.. தெப்பத்திருவிழாவை காண தயாராகும் மதுரை
மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தைப்பூசம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விவசாயம் செழிக்க வேண்டி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நெல் அறுவடை செய்வது இந்த திருவிழாவின் சிறப்பம்சம்சம். முக்கிய விழாவான தெப்பத்திருவிழா ஜனவரி 25ஆம் தேதி வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது.
மதுரையில் தினம் தினம் திருவிழாதான். சித்திரை மாதம் பத்து நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா தொடங்கி பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா வரைக்குமே திருவிழாக்கோலம்தான். எல்லா திருவிழாக்களுமே பவுர்ணமியை அடிப்படையாக கொண்டதாகவே உள்ளது.

அந்த வகையில் தை மாதம் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தை தெப்பத் திருவிழா 14ஆம் தேதி தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு முதல் நாளான 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணியளவில் சுவாமி சன்னதி முன்பு சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர்.
கொடிக்கம்ப மண்டபம் முன்பு சிம்மாசனத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் தனித்தனியே எழுந்தருளி அருள்பாலித்தனர். இதனையடுத்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்க சப்பரம், அன்னம், காமதேனு, சிம்மாசனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்பட வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளுடன் அம்மன், சுவாமி புறப்பாடு நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து ஜனவரி19ஆம் தேதி திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 21ஆம் தேதி மச்சகந்தியார் திருமணம், 22ஆம் தேதி இரவு சப்தாவர்ணம் எடுப்புத் தேரில் சுவாமி எழுந்தருள்வர். 23ஆம் தேதியன்று 10ஆம் நாள் தெப்பம் முட்டுத் தள்ளுதல், 24ஆம் தேதி 11ஆம் நாள் கதிரறுப்பு திருவிழா நடைபெறும். தை மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நெல் அறுவடை செய்வதை காண கண்கோடி வேண்டும்.
தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கும் வண்டியூர் தெப்பக்குளத்தில் வரும் 25ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. 24ஆம் தேதி சுவாமியும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். பின்னர் 10 மணிக்குமேல் கோயிலுக்கு திரும்புகின்றனர். அன்றைய தினம் சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.












Click it and Unblock the Notifications