Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தைப்பூசம்.. ஏழு திரைகள் நீக்கி ஒளிர்ந்த ஜோதி.. வடலூரில் ஒலித்த அருட்பெருஞ்சோதி.. தனிப்பெருங்கருணை

Subscribe to Oneindia Tamil

கடலூர்: தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று சத்திய ஞான சபையில் கோலாகலமாக நடைபெற்றது. ஏழு திரைகள் நீக்கி ஜோதி வடிவில் காட்சி அளித்த வள்ளலாரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று முழக்கமிட்டு வணங்கினர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் இன்று 153ஆவது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் தைப்பூச திருவிழா தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தைப்பூச திருவிழா

Thaipusam Vadalur 153 year Jothi dharisanam Today : Devotees chanting Arutperumjothi

தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. ஏழு திரைகள் நீக்கி ஜோதி வடிவத்தில் காட்சி அளிக்கும் வள்ளலாரை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே குவிந்திருந்தனர்.

கடலூருக்கு அருகே உள்ள மருதூரில் பிறந்த ராமலிங்க அடிகளார் 'சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சத்தியச் சங்கத்தை அமைத்து உயிர்க்கருணை ஒழுக்கத்தை கடைபிடிக்கச் சொல்லி அனைவரையும் வலியுறுத்தினார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று அறிவுறுத்தி வந்த வள்ளலார் அன்னதானச் சாலை ஒன்றை அமைத்தார்.

வடலூரில் பார்வதிபுரம் என்னும் ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருக்கிறது.

இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே 'பேருபதேசம்' என்று சொல்லப்படுகிறது.

1874ஆம் வருடம் தை மாதம் 19ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருள் வாழ்த்து வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது முதன்மைச் சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

வள்ளலார் அன்று முதல் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்சோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையைப் பலகணி வழியாகப் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. வள்ளலார் ஏற்றிய அந்த அகல் தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் வடலுாரில் அருட்பிரகாச வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி நேற்று காலை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் தர்மசாலையில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. மருதூரில் உள்ள வள்ளலார் சன்னதியிலும், கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதியிலும் கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து வடலூர் சத்திய ஞான சபையில் கொடியேற்றம் நடைபெற்றது.

வள்ளலாருக்கு சத்திய ஞானசபை கட்ட நிலத்தை தானமாக அளித்த பார்வதிபுரம் கிராம மக்கள் வரிசையாக தட்டுடன் மேளதாளம் முழங்க வந்தனர். கிராம பெரியவர்கள் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் அமைந்துள்ள கொடி மரத்தில் சன்மார்க்க கொடி ஏற்றினர்.

இன்றைய தினம் தைப்பூச ஜோதி தரி சன பெருவிழாவையொட்டி சத்திய ஞான சபையில் காலை 6:00 மணிக்கு 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அருட்பெருஞ்சோதி..தனிப்பெருங்கருணை என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான்.

ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் காணலாம்.
இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இறைக்காட்சியோடு தங்களையே தாங்கள் காணும் உணர்வு அந்தப் பொழுதில் 'அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' என்று முழக்கமிட்டு பக்தியுடன் வழிபட்டனர்.

தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று காலை 6 மணிக்கு சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்டது. இன்றைய தினம் காலை 10 மணி பகல் 1:00 மணி, இரவு 7:00 மணி, 10:00 மணி, நாளை 6ம் தேதி காலை 6 மணி என 6 காலம் 7 திறைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதேபோல், வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வரும் 7ம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது. ஜோதி தரிசனத்தை காண வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+