தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா..கோலாகல கொடியேற்றம்..மே 1ல் திருத்தேரோட்டம்
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற மே ஆம்1 ஆம் தேதி நடைபெறுகிறது. பஞ்ச மூர்த்திகளும் தனித்தனியாக திருத்தேரில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வருவதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. பாரம்பரிய பெருமை கொண்ட இந்த ஆலயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

எந்த விதமான தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞான அறிவியலும் அறியாத காலத்தில் கோபுரத்தின் நிழல் கீழே விழாத வகையில் ஒரு பிரம்மாண்ட கோவிலை எப்படி கட்டினார்கள், கோவில் விமானத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கல்லை எப்படி கோபுரத்தின் மேல் ஏற்றி இருப்பார்கள் என்பது போன்ற பல விஷயங்கள் இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற விழாக்கள் நடக்கும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான,பஞ்சமூர்த்தி புறப்பாடு ஏப்ரல் 30ஆம் தேதியும்,தேரோட்டம்,மே 1ஆம் தேதியும் நடைபெறுகிறது.

தஞ்சையில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வலம் வரும். நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெரிய கோவிலில் தேரோட்டம் நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேரோட்டத்தின் போது முதலில் விநாயகர், பிறகு சுப்பிரமணியர், அம்மனுடன் தியாகராஜர் திருத்தேர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகளும் தனித்தனியாக ராஜ வீதிகளில் வலம் வருவதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications