கூட்டத்தை பாத்தீங்கள்ல..ஆயிரம் கொடுத்தால் அம்மனை ஈசியா பார்க்கலாம்! சமயபுரத்தில் புரோக்கர் டார்ச்சர்
திருச்சி: ஆடி மாதத்தை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் ஆடி 18, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், இதனை பயன்படுத்திக் கொண்டு இடைத் தரகர்கள் சிலர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அம்மனை எளிதில் தரிசிக்கலாம் எனக் கூறி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். திருச்சி அருகே காவிரிக்கரை அருகே அமைந்திருக்கும் இந்தக் கோயில் சக்தி ஸ்தலங்களில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்துக்கு அடுத்து திருச்சி மாவட்டத்தில் முக்கிய அடையாளமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பார்க்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அது மட்டுமல்லாமல் செவ்வாய், வெள்ளி, ஆடி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். பொதுவாக கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கும் போது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முடி காணிக்கை செலுத்துகிறேன் என வேண்டிக் கொள்வது வழக்கம். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்களும் குழந்தை வரம் வேண்டுவோரும் சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க செல்வார்கள்.
கோவிலில் பொங்கல் வைத்து முடிக்காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற பக்தர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் கோயிலின் பெருமை நாளுக்கு நாள் பரவி வரும் நிலையில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 10,000 முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தினமும் அங்கு சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களை குறி வைத்து ஒரு கும்பல் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து வருவதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது.
குறிப்பாக ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் திருச்சி, பெரம்பலூர், கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் பக்தர்கள் தொடர்ந்து பல மணி நேரம் காத்திருந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களிடம் கோயிலை சுற்றி இருக்கும் இடைத்தரகர்கள் சிலர் அணுகி ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 10 நிமிடத்தில் சாமி தரிசனம் செய்துவிடலாம். தரிசனம் செய்த பிறகு பணம் கொடுத்தால் போதும் என பேசுகின்றனர்.
மேலும் ஐந்து பேர் இருந்தால் ஒருவருக்கு இலவசம் மீதி நான்கு பேருக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என வசூல் செய்து வருகின்றனர். மேலும் கோயிலை சுற்றி 50க்கும் மேற்பட்டோர் 'கிராக்கி' என்ற பெயரில் இருந்து கொண்டு தலைக்கு ஆயிரம் ரூபாய் என பேசி அழைத்துச் செல்கின்றனர். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதோடு, நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் மக்கள் கடும் அதிர்ச்சியை சந்திக்க வேண்டியுள்ளது. இதனை காவல்துறையும் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
குறிப்பிட்ட தொகையை பாதுகாவலர்களுக்கும் காவல் துறையினருக்கும் கொடுத்து விட்டே அந்த புரோக்கர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதாக கூறப்படுகிறது. இதனிடைய நாங்கள் எவ்வளவு நேரம் என்றாலும் பரவாயில்லை காசு கொடுக்க மாட்டோம் என பக்தர்கள் சிலர் பேசுவதையும் பார்க்க முடிந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் இணை ஆணையர் கல்யாணி 'கிராக்கி' என்ற பெயரில் பலரை காசு வாங்கிக் கொண்டு உள்ளே அழைத்துச் செல்வதை கட்டுப்படுத்தினார். அவர் தற்போது மாற்றப்பட்டு இருக்கும் நிலையில் புதிதாக வந்திருக்கும் ஆணையர் இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
நீங்கள் இதுபோல திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சங்கடத்தை சந்தித்த அனுபவம் உண்டா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் கமெண்ட் -ல் தெரிவிக்கலாம்..












Click it and Unblock the Notifications