புரட்டாசி பௌர்ணமி.. மதுரையில் 5 கருட சேவை.. மாசி வீதிகளில் வலம் வந்த பெருமாளை தரிசித்த பக்தர்கள்
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, ஐந்து கருட சேவை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையில் எழுந்தருளிய பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாசி வீதிகளில் 5 கருட வாகனங்களில் வலம் வந்த பெருமாள்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் பௌர்ணமியன்று ஐந்து கருடசேவை ஆண்டு தோறும் நடைபெறும்.

திருநாங்கூர் திவ்ய தேசத்தில் தை அமாவாசை நாளில் 11 கருட சேவை நடைபெறும். 11 கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் 11 கருட வாகனங்களில் ஏறி வீதி உலா வருவதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநாங்குகூர் செல்வார்கள்.
அதே போல மதுரையில் புரட்டாசி பவுர்ணமி தினத்தில் மதுரையில் பஞ்ச கருட சேவை நடைபெறும். ஐந்து கருட சேவையில், முன்னதாக, கூடலழகர் பெருமாள் கோவிலில் இருந்து தங்கக் கருட வாகனத்தில் வியூக சுந்தரராசப்பெருமாளும், மற்றொரு கருட வாகனத்தில் கூடலழகரும் எழுந்தருளினர். இதே போன்று மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து வீரராகவப் பெருமாளும், வடக்குமாசிவீதியிலுள்ள வீரராகவப்பெருமாள் கோவிலில் உள்ள உற்சவரான ரங்கநாதரும், மேலமாசிவீதி தெற்குமாசிவீதி சந்திப்பிலுள்ள மதனகோபாலசாமி கோவிலிலிருந்து மதனகோபால சாமியும் கருட வாகனத்தில் கூடலழகர்கோயில் முன்பு எழுந்தருளினர் .

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையில் எழுந்தருளிய பெருமாளுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐந்து கருடவாகனங்களில் பெருமாள் மேல மாசிவீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி, கிழக்கு மாசி வீதி என மாசி வீதிகளை வலம் வந்தனர். கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதைக் காண கண் கோடி வேண்டும். அதுவும் 5 கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளியதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.













Click it and Unblock the Notifications