நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
நாமக்கல்: பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த, 2009ல் கடைசியாக நடத்தப்பட்டது. இந்நிலையில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தனியார் பங்களிப்பு மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களாக, கோயில் திருப்பணிகள் நடந்து வந்தது.

இக்கோயிலில் கோபுரம் கிடையாது என்பதால், சுவாமிக்கு பாலாலயம் செய்யாமல் திருப்பணிகள் நடந்து வந்தன. முதற்கட்டமாக, விநாயகர் கோயில் புனரமைப்பு, கோவில் உள்புறம், வெளிப்புறத்தில் வர்ண பூச்சுகள், சுவாமி சிலைகளுக்கு வர்ணம் பூசுதல், 33 விதமான ஆஞ்சநேயர் சிலை வடிவமைப்புடன் கூடிய பணிகள் நிறைவடைந்தன.
இதனையடுத்து இன்றைய தினம் கும்பாபிஷேகம் காலையில் கோலாகலமாக நடைபெற்றது. 18 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயருக்கு பல வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனை நாமக்கல் மட்டுமல்லாது பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக நன்னீராட்டு விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தாலும் நாமக்கல் நகரப் பகுதிக்குள் நேற்றும் இன்றும் இரண்டு நாட்களுக்கு லாரி மற்றும் கனரக நாமக்கல் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே நாமக்கல் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும், இன்று நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications