திருச்செந்தூர் ஆவணி திருவிழா தேரோட்டம் கோலாகலம்.. விண்ணை எட்டிய அரோகரா முழக்கம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ஆடி அசைந்து வந்த தேரினை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும். இங்கே சுப்ரமணியர் கடலோரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு சந்தனமலை உள்ளது சிறப்பு.

திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம், அசுரர்களை சூரபத்மனை சம்ஹாரம் செய்து சம்ஹார மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். ஐப்பசி மாதத்தில் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது. அதே போல ஆவணி திருவிழாவும், மாசி திருவிழாவும் அற்புதமானது.
இந்த ஆண்டுக்கான ஆவணித்திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7ஆம் திருநாள், 8ஆம் திருநாளில் முருகப்பெருமான் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் அருள்பாலித்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலையில் தொடங்கியது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வருகிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்கிறது. தொடர்ந்து வள்ளியம்பாள் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்கிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் கடல் அலைகளின் ஓசையை தாண்டி விண்ணை எட்டியது. இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.












Click it and Unblock the Notifications