திருச்செந்தூர் மாசித்திருவிழா.. பச்சை சாத்தி கோலத்தில் அருள்பாலித்த முருகன்.. நாளை தேரோட்டம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. காவடிகளை சுமந்து கொண்டு திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7ஆம் திருநாளான செவ்வாய்கிழமையன்று முருகப்பெருமான் சிவப்பு சாத்தி கோலத்தில் சிவஅம்சமாக அருள்பாலித்தார். ஏராளமானோர் அரளிப்பூ மாலை கொடுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

8ஆம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.
அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. சண்முகருக்கும் வள்ளி தெய்வானை அம்மனுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் மகா விஷ்ணு அம்சமாக வீதி உலா வந்த சுவாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
இன்றைய தினம் இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றனர்.

10ஆம் திருநாளான நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானை சமேதராக திருத்தேரில் எழுந்தருளுவார். முதலில் விநாயகர் தேர், 2வது சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர், 3வது தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் என மூன்று ரதங்களும் தனித்தனியாக மாட வீதிகளில் உலா வந்து நிலையை அடையும்.
சனிக்கிழமை 11ஆம் திருநாள் இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. திருச்செந்தூரில் கடந்த 3 நாட்களாகவே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பாதயாத்திரையாக பக்தர்கள் காவடிகளை சுமந்து கொண்டு திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications