திருப்பதி ஏழுமலையானை ஒரு முறை தரிசித்தால் அடுத்த 90 நாட்களுக்கு தடை! திருமலை தேவஸ்தானம் அதிரடி உத்தரவு
திருப்பதி: தேவஸ்தானத்தின் இலவச தரிசன திட்டத்தில் திருப்பதி ஏழுமலையானை ஒரு முறை வழிபட்டால் அடுத்த 90 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக செயல்பட்டால்ரூ 300 சிறப்பு தரிசனம், விஐபி பிரேக் தரிசனம் உள்ளிட்டவைகளுக்கும் அமல்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது திருப்பதி ஏழுமலையானை ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டில் தரிசிக்க வேண்டுமானால் 3 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால் தர்ம தரிசனத்திலும் நடைபாதை தரிசனத்திலும் ஏழுமலையானை தரிசிக்கலாம். அது போல் தர்ம தரிசனத்திற்கு கூட கீழ் திருப்பதியில் டிக்கெட்டுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டால் கூண்டில் போய் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த டிக்கெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் போனால் போதுமானது.
அது போல் திருப்பதியை சுற்றியுள்ள உள்ளூர் மக்களுக்கும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இலவசமாக ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதாவது திருப்பதி, திருமலை, ரேணிகுண்டா, சந்திரகிரி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பக்தர்களில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று இலவசமாக ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசனத் திட்டம் இந்த மாதம் நாளை நடைபெறுதிறது. இதற்காக திருப்பதி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுன்ட்டரில் ஒவ்வொரு வாரமும் 250 பேருக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது.அது போல் திருப்பதி மலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுன்ட்டரிலும் ஒவ்வொரு வாரமும் 500 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.
டிக்கெட்டை பெறுவதற்கு தங்களது அசல் ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். இதனிடையே உள்ளூர் பக்தர்கள் தேவஸ்தானத்தில் இலவச தரிசன திட்டத்தில் ஒரு முறை ஏழுமலையானை தரிசித்தால் அடுத்த 90 நாட்கள் வரை ஏழுமலையானை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு நல்ல திட்டத்தை இத்தனை நாட்களாக வரவேற்று வந்த பொதுமக்கள் தற்போது 90 நாட்களுக்கு பாலாஜியை தரிசிக்க முடியாதே என்பதை நினைத்து வேதனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
இந்த திட்டம் செயல்படுத்தும் விதத்தில் வெற்றி கிடைத்தால் இதே போல் ரூ 300 சிறப்பு கட்டண தரிசனம், விஐபி பிரேக் தரிசனம் ஆகிய அனைத்து விதமான தரிசன நடைமுறைகளுக்கும் இதே போல் 90 நாட்கள் தடை நடைமுறையை அமலுக்கு கொண்டு வருவது குறித்து தேவஸ்தானம் யோசித்து வருகிறது.












Click it and Unblock the Notifications