மார்ச் மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க குவியும் கூட்டம்... என்னென்ன விழாக்கள்.. ஏற்பாடுகள்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை காலமான ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை விஐபி சிபாரிசு கடிதங்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள், மேலும் சில ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் குறைக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். விடுமுறை நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மார்ச் 6 சர்வ ஏகாதசி
மார்ச் 8 மகா சிவராத்திரி
மார்ச் 20 சர்வ ஏகாதசி மார்ச் 20 முதல் 24 வரை வருடாந்திரி தெப்ப உற்சவம்.
ஆண்டுதோறும் பங்குனி மாத பெளர்ணமி அன்று நடைபெறுவது வழக்கம். சுவாமி புஷ்கரிணியில் ஐந்து நாட்கள் விழாவாக இவ்விழா நடைபெறும். தெப்ப உற்சவத்தின் முதல் நாளில் ராமர், சீதை, லட்சுமணர் புஷ்கரிணியில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் வலம் வருவார்கள்.
இரண்டாம் நாளில் ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மணி தேவியும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் செய்வார். திரியோதசி துவங்கி, பெளர்ணமி வரையிலான மீதமுள்ள 3 நாட்களும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி தெப்பத்தில் வலம் வருவார்கள். தெப்ப உற்சவத்தின் முதல் இரண்டு நாட்களில் மூன்று முறையும், மூன்றாவது நாள் முதல் ஐந்து முறையும், கடைசி நாளில் 7 முறையும் உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார்கள். இந்த நாளில் பெளர்ணமி நிலவின் அழகுடன் தெப்ப உற்சவ அழகையும் காண ஏராளாமான பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம்.
மார்ச் 25ஆம் தேதி தும்புரு தீர்த்த முக்கோட்டி, ஸ்ரீ லட்சுமி ஜெயந்தி. ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவம். பங்குனி உத்திரம் திருவிழா. ஏப்ரல் 09 பங்குனி 27 ஸ்ரீ குரோதி நாம வருடப்பிறப்பு உகாதி பண்டிகை திருமலையப்பசுவாமி உகாதி ஆஸ்தானம்.
இதனிடையே திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில்தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தொலைபேசி வாயிலாக பக்தர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழுமலையான் சேவைக்கான வயது உச்சவரம்பை 60 லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
60 வயதுக்குட்பட்டவர்களால்தான் பக்தர்களுக்கு தேவையான சேவையை செய்ய முடியும். ஏழுமலையானுக்கு சேவை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். பக்தர்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்கப்படுகிறது. ஏழுமலையானின் பக்தர்கள் இதற்காகவே காத்திருந்து உடனடியாக பதிவு செய்து விடுவதால் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் தீர்ந்து விடுகின்றன.
சுவாமியை மிக அருகில் தரிசிக்க ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் மற்றும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை பெற்று தரிசனம் செய்வதுதான் வழி. கோடை விடுமுறை வருவதால் வரும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை விஐபி சிபாரிசு கடிதங்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள், மேலும் சில ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் குறைக்கப்படும் என்றும் தர்மா ரெட்டி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications