திருப்பதி ஏழுமலையானுக்கு இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம்.. பக்தர்கள் ஹேப்பி.. அக்டோபர் டிக்கெட் ரிலீஸ்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. புரட்டாசி மாதம் ஒரு பிரம்மோற்சவமும், நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையானை அக்டோபர் மாதம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் இன்று காலை முதல் திருப்பதி தேவஸ்தானம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான்: உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

பிரம்மோற்சவம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். திரும்பும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம் எதிரொலிக்கும். இந்த ஆண்டு பக்தர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
ஆர்ஜித சேவா டிக்கெட்: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலைமோதும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் சுவாமியை சிறப்பு கட்டணம் மூலம் தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகளை இன்று ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு உள்ளது. டிக்கெட்டுகளை ஜூலை 20ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம்.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங்: இதற்காக திருப்பதி தேவஸ்தான இணையதளமான online.tirupatibalaji.ap.gov.in என்கிற இணைய முகவரியிலோ அல்லது திருப்பதி தேவஸ்தானத்தின் TTDDEVASTHANAMS என்கிற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவோ பக்தர்கள் தங்களது டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம்: அதேபோல், அக்டோபர் மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை ஜூலை 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பிரம்மோற்சவம் எப்போது: திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சலகட்லா பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதே போல் நவராத்திரி பிரம்மோற்சவம் வழக்கம் போல அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவம் நடைபெறும் பத்து நாட்களும் தினசரியும் காலையும் மாலையும் மலையப்பசுவாமி வீதி உலா வருவார். லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் என்பதால் ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications