ஏழுமலையான் திருக்கல்யாணம் தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும்..அமெரிக்கா, கனடாவில் கல்யாண உற்சவம்
திருப்பதி: திருமண தடையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் திருக்கல்யாண உற்சவத்தை காண வேண்டும். சம்பங்கி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு தினமும் மதியம் கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த திருக்கல்யாண வைபவத்தை நேரில் தரிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள் ஆன்லைன் மூலமும் தரிசனம் செய்கின்றனர். வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் சீனிவாச பெருமாள் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் திருக்கல்யாணம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளிநாட்டு பக்தர்கள் திருக்கல்யாண உற்சவ தரிசனம் செய்யும் வகையில் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் திருக்கல்யாணம் நடந்த ஏற்பாடு செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எப்போதும் திருவிழா நடந்துகொண்டே இருக்கும். 365 நாட்களில் சுவாமிக்கு உற்சவங்கள், சேவைகள் நடந்து கொண்டே இருப்பது இங்கு விசேஷம். அதனால்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலை நித்ய கல்யாணம், பச்சை தோரணம் கொண்ட கோயில் என பக்தர்கள் அழைக்கின்றனர்.
சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் அருள்பாலிக்கிறார். உலகிலேயே அதிகமான பக்தர்கள் வழிபட செல்லும் இந்து கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினசரி காணிக்கையாக 5 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் கிடைக்கிறது.
காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. திருப்பதி மலை வராகசுவாமியின் இருப்பிடமாக ஆதி வராக ஷேத்திரமாக இருந்தது. சோழ ராஜாவிற்கு ஆசி வழங்கி அனுப்பிய மகாவிஷ்ணு ஸ்ரீனிவாசன் என்ற பெயருடன் தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டி வராக சுவாமியை சந்தித்தார். அவரும் மகிழ்ந்து இடமளித்தார். அதற்கு நன்றிக் கூறும் விதமாகத் தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புஷ்கரணியில் குளித்து வராக சுவாமியை தரிசித்து பூஜை, நைவேத்தியங்களை முதலில் அவருக்கு செய்துவிட்டு பிறகு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஒரு ஐதீகமும் உள்ளது.
சீனிவாச பெருமாள் ஆகாசராஜன் மகள் பத்மவதியை திருமணம் செய்து கொண்டார் என்பது புராணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாத கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி சீனிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்ததாக புராணங்கள் சொல்கின்றன. நாராயண வனத்தில் பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர். இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர்.

திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி. நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.
இது தான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம். நாராயணவனத்தில் உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில். திருப்பதி கோவிலை காட்டிலும் இந்த கோவில் மிக பழமையானது.
இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது.
திருமண தோஷத்தினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் திருமண கோலத்தை தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் பல ஊர்களிலும் சீனிவாச பெருமாளுக்கு கோலாகலமாக திருக்கல்யாணம் நடத்துகின்றனர். வெளிநாடுகளிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. திருமணம் நடைபெறுவதில் தடையிருப்பவர்கள் சீனிவாச பெருமாள் கல்யாணத்தை தரிசனம் செய்ய திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது
அமெரிக்கா, கனடா நாடுகளில் முக்கிய 14 நகரங்களில் இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஜூலை 23ஆம் தேதி வரை அமெரிக்கா, கனடா நாடுகளில் முக்கிய 14 நகரங்களில் நடத்தப்படுகிறது. திருக்கல்யாணம் உற்சவம் குறித்த சுவரொட்டிகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி முன்னிலையில் தாடி பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் வெளியிட்டனர்.
அமெரிக்கா, கனடாவில் திருக்கல்யாண உற்சவம் நடத்துவதை அந்தந்த மாநகர நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கல்யாண உற்சவத்திற்கு தேவையான பூஜை பொருட்கள், பூக்கள், வேத பண்டிதர்களை நியமிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications