திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்.. கிரிவலம் வரும் பக்தர்கள்.. குழந்தைகளுக்குப் பாதுகாப்புப் பட்டை
சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கிரிவலம் வந்த வண்ணமிருக்கிறார்கள். பெற்றோர்களுடன் கிரிவலம் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்களின் மணிக்கட்டுகளில் பெயர், செல்நம்பர் எழுதப்பட்ட விவரங்கள் அடங்கிய பட்டைகளை காவல்துறையினர் கட்டி அனுப்பி வைத்தனர்.
அருணன் என்றால் சூரியன் நெருப்பின் நிறமான சிவப்பை குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருளாகும். இம்மலையில் உயரம் 2,688 அடியாகும். அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறிவந்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 9 நாட்களும் பல்வேறு வாகனத்தில் காலையிலும் இரவிலும் வெகு விமர்சையாக நடைபெற்று பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது.
அதிகாலையில் பரணி தீபம்
10ம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 4 மணியளவில் அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாகவும் அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவிலின் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையாருக்கு அரோகரா
அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில் உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட மற்ற சன்னதிகளுக்கு கொண்டு சென்று பரணி தீபத்தினை ஏற்றினார். இந்த பரணி தீப தரிசனத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். கார்த்திகை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கிரிவலப்பாதையில் பக்தர்கள்
அண்ணாமலையார் கோவில் கோபுரத்தில் வாசலில் இருந்து கிரிவலப்பாதை உள்ள 14 கிலோ மீட்டர் தூரமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெண்களும் குழந்தைகளும் வரிசையாக கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கம் எங்கும் எதிரொலிக்கிறது. பெற்றோர்களுடன் கிரிவலம் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்களின் மணிக்கட்டுகளில் பெயர், செல்நம்பர் எழுதப்பட்ட விவரங்கள் அடங்கிய பட்டைகளை காவல்துறையினர் கட்டி அனுப்பி வைத்தனர்.
மாலையில் மகாதீபம்
கார்த்திகை திருநாளை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெறும். மாலை 5.55 மணிக்கு, கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளிப்பார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மிகச்சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக 4,500 கிலோ தூய நெய், 1,150 மீட்டர் திரி, 20 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.
காவல்துறை பாதுகாப்பு
மகாதீபத்தை காண பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தரிகள் வந்து கொண்டிருப்பதால் திருவண்ணாமலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் 12,907 காவலர்கள், கூடுதலாக 500 சிசிடிவி கேமராக்கள் வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 5 டிஐஜி, 32 எஸ்.பிக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலையேற அனுமதி
2,500 பக்தர்களுக்கு மட்டும் புகைப்படத்துடன் கூடிய அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் மலைப்பகுதியில் ஏறுவதற்கு பக்தர்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதால் மக்கள் வரிசையில் காத்திருந்து அனுமதி பெற்றனர். மலை ஏறுவதற்கு அனுமதி சீட்டு பெற ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அட்டை இதில் ஏதாவது ஒன்றை வைத்து புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மகாதீப விழாவை தரிசிக்க, இன்று மதியம் 2 மணியில் இருந்து கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.