சபரிமலையில் கூட்ட நெரிசலை குறைக்க! மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் புதிய நடைமுறை
சபரிமலை: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் புதியதொரு மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. இந்த மாற்றத்தால் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாசி மாத பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை கடந்த 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடை திறந்த அன்று முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

4 மணி நேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் காத்திருக்கிறார்கள். வழக்கமாக மாத பூஜை நடைபெறும் நாட்களில் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஆனால் பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இரவு 11 மணிக்குத்தான் நடை சாத்தப்படுகிறது.
நேற்றைய தினம் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகமாக இருந்தது. நாளை 17ஆம் தேதி இரவுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் பங்குனி மாத பூஜைகளுக்காக மார்ச் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு நிமிடத்திற்கு இத்தனை பக்தர்கள் என கணக்கு வைத்து 18 படிகளில் ஏற்றப்பட்டு வருகிறார்கள். அதற்கு பின்பும் மேம்பால கியூவில் காத்திருந்தால் தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் வரும் மார்ச் மாதம் முதல் மாற்றம் ஏற்பட போகிறது. அதாவது மார்ச் 14ஆம் தேதி முதல் பக்தர்கள் 18ஆம் படி ஏறிய உடன் தரிசனம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி பக்தர்கள் 18ஆம் படி ஏறிய பின்னர் இடது புறமாக சென்று நடை மேம்பாலத்தில் ஏற வேண்டிய அவசியம் இல்லை.
18ம் படி ஏறியவுடன் கொடிமரத்தின் இடதுபுறமாகவும், வலதுபுறமாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம். 18ஆம் படியின் கடைசி படியில் ஏறும் போதே ஐயப்பனை தரிசிக்கலாம்.












Click it and Unblock the Notifications