திருப்பதி ஏழுமலையான் தரிசனம்! தினமும் 1000 சீனியர் சிட்டிசன்களுக்கு டிக்கெட்டே இல்லாமல் தரிசனமா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் குறித்து வதந்தி பரவி வருகிறது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது போல் பொய் தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில மாதங்களாக அங்குள்ள நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரூ 300 விரைவு தரிசனம் என்பது எப்போது வேண்டுமானாலும் டிக்கெட் இருந்தால் அதை நாம் பெற்றுக் கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம். ஆனால் தற்போது 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.

அது போல் மூத்த குடிமக்கள், கை குழந்தைகளை வைத்திருப்பவர்கள், தீராத நோயுள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் கோயிலின் நுழைவுவாயிலின் முன்பு அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கென ஒரு டைம் ஒதுக்கப்படும். அதில் மூத்த குடிமக்கள் என்பதற்கான அடையாள அட்டையை காட்ட வேண்டும். அது போல் தீராத நோயுள்ளவர்களும் மருத்துவச் சான்றிதழை அளிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் என்றால் பார்த்தவுடன் தெரிந்தவர்களுக்கு சான்றிதழை கேட்க மாட்டார்கள். ஆனாலும் அவசியம் கொண்டு வர வேண்டும். சிலருக்கு பகுதி அளவே பிரச்சினை இருக்கும். அவர்கள் கட்டாயம் சான்றிதழை காட்ட வேண்டும். இப்படி இவர்களுக்கென ஒரு டைம் ஒதுக்கி ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த நடைமுறையும் தற்போது மாறிவிட்டது. இவர்களுக்கு மாதந்தோறும் 23 ஆம் தேதி டிக்கெட்கள் 3 மாதங்களுக்கு முன்பே திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது. டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ரூ 50 மதிப்புள்ள லட்டு இலவசமாக சுவாமி தரிசனத்திற்கு பிறகு வழங்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்து டிக்கெட் பெற்று பக்தர்களுக்கு திருமலையில் உள்ள திருமலை நம்பி கோயிலுக்கு அருகே சிறப்பு வரிசையில் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 மணிக்கு அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் டிக்கெட் இன்றி நேரடியாக வந்தால் இந்த வரிசையில் தினமும் 1000 சீனியர் சிட்டிசன்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். பக்தர்கள் சரியான தகவல்களுக்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tirumala.org https://ttdevastanms.ap.in ஆகிய இணையதளங்களில் உண்மையை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதம் இரு முறை கருட சேவை நடைபெறுகிறது. நாளை கருட பஞ்சமி அன்றும் 19ஆம் தேதி ஆவணி மாத பவுர்ணமி அன்றும் கருட வாகனத்தில் ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வரவுள்ளார். புதுமணத் தம்பதியினர் கருட பஞ்சமி பூஜை செய்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். கருடனை போல் வலிமையான குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.












Click it and Unblock the Notifications