திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போறீங்களா.. நாளெல்லாம் பெருமாளை பார்க்க செம சான்ஸ்.. இதை படிங்க
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை காலை சுப்ரபாதம் முதல் இரவு ஏகாந்த சேவை வரை தரிசனம் செய்ய விரும்புவோருக்கு உதய அஸ்தமன சேவை என்ற திட்டத்தின் பேரில் ரூ 1.5 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் விஸ்வரூப தரிசனம், ஆகாய கங்கை தீர்த்தம், வஸ்திரம் சாத்துதல், தோமாலை சேவை, சகஸ்ரநாம் அர்ச்சனை, கல்யாண உற்சவம் , ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு சில விதிகளுடன் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏழுமலையானை காலை முதல் இரவு வரை ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்க உதய அஸ்தமன சேவை என்ற பெயரில் தொடங்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூ 1.50 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலை சுப்ரபாத சேவை முதல் அர்ச்சனை, தோமாலை சேவை, கல்யாண உற்சவம் என தொடர்ந்து காலை முதல் இரவு வரை திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் அனைத்து சேவைகளையும் கண்டு களிக்க வெள்ளிக்கிழமை தவிர்த்து வார நாட்களில் ஒருவருக்கு 1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அது போல் அபிஷேகம் நடைபெறும் வெள்ளிக்கிழமை மட்டும் ஒருவருக்கு ரூ 1.5 கோடி எனவும் திருப்பதி தேவஸ்தானம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த டிக்கெட்டை பெறும் பக்தர்கள் தங்கள் வாழ்நாளில் 25 ஆண்டுகள் வரை ஆண்டுதோறும் இந்த உதய அஸ்தமன சேவையில் பங்கேற்கலாம். இந்த டிக்கெட்டுகள் மொத்தம் 531 உள்ளன.
இவை விரைவில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் வசூலிக்கப்படும் பணத்தில் 600 கோடியில் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ரூ 10 லட்சமாக இருந்த டிக்கெட்டின் விலையை ரூ 1.50 கோடிக்கு உயர்த்தியதாக மடாதிபதிகள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். மருத்துவமனை கட்டுவது என்பது அரசின் கடமை. இதற்காக பக்தர்களிடம் இருந்து தேவஸ்தான் ஏன் கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்க வேண்டும் ? என கேள்விகள் எழுந்துள்ளன.
மேற்கண்ட கல்யாண உற்சவம், தோமாலை சேவை உள்ளிட்டவைகளுக்கு 120 முதல் 1000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த உதய அஸ்தமன சேவைக்கு கோடிக்கணக்கில் கட்டணம் வாங்கப்படுகிறது. இந்த டிக்கெட் புக்கிங் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications