கோடை விடுமுறை..திருமலையில் ஏழுமலையானை தரிக்க குவியும் பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதியில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடந்து மலையேறும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் எனப்படும் திவ்ய தரிசன டோக்கன்களை பரிசோதனை திட்ட அடிப்படையில் வழங்கப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால் சாதாரண பக்தர்களுக்கு சாமி கும்பிட முன்னுரிமை அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.
திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும் என்ற நம்பிக்கையின்படி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்.
மணிக்கணக்கில் மட்டுமல்லாது நாள் கணக்கில் காத்திருந்து கூட ஏழுமலையானை கண் குளிர தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கோடை விடுமுறை நாட்களிலும் ஏழுமலையானை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர். பேருந்து, ரயில் மூலம் வரும் பக்தர்கள் பலர் பாதையாத்திரையாக சென்றும் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்களுக்கு வசதி
இந்த நிலையில் பாதையாத்திரை வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, "ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை கோடை விடுமுறையை முன்னிட்டு அளவிற்கு அதிகமான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள். அதில் நடந்து மலை ஏறும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்லும் பக்தர்களுக்கு தினமும் பத்தாயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் 5000 டோக்கன்களும் திவ்ய தரிசனத்திற்காக ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் பரிசோதனை திட்டம் அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறினார்.

விஐபி பிரேக் தரிசன அனுமதி
கோடை விடுமுறையை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால் சாதாரண பக்தர்களுக்கு சாமி கும்பிட முன்னுரிமை அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோடை விடுமுறை காலத்தில் புரோட்டகால் தகுதி வாய்ந்த பக்தர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படும்.எனவே முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனத்திற்காக பரிந்துரை கடிதங்களை பக்தர்களிடம் கொடுத்து அனுப்பக்கூடாது என்று கேட்டு கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்
இது தவிர, தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் எண்ணிக்கை மற்றும் பல்வேறு மாநில சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கு வழங்கப்படும். 300 ரூபாய் தரிசன டிக்கெட் எண்ணிக்கை ஆகியவற்றையும் கோடைகாலத்தில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் திருப்பதி மலையில் 7500 அறைகள் உள்ளன. அவற்றில் 40 ஆயிரம் பக்தர்கள் தங்க இயலும். சாதாரண பக்தர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக 85 சதவிகித அறைகள் திருப்பதி மலையில் உள்ளன என்றும் கூறினார்.

இலவச உணவு
கோடைகாலத்தில் அன்னதான கூடம் மற்றும் திருப்பதி மலையில் உள்ள இரண்டு மற்றும் நான்கு ஆகிய பல்வசதி மண்டபங்களில் செயல்படும் அன்னதான கூடங்கள், சாமி தரிசன வரிசைகள் ஆகியவற்றில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். கோடை காலம் முழுவதும் திருப்பதி மலையில் உள்ள அனைத்து மொட்டை போடும் மண்டபங்களிலும் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். பக்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் லட்டு பிரசாத விநியோகம் செய்ய தேவையான நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

திருமலை தரிசனம் குறித்த ஆர்டிசி அறிவிப்பு
ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருமலைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் தினமும் 1000 தெய்வீக தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் திருப்பதிக்கு செல்லும் பயணிகள், கட்டணத்துடன் கூடுதலாக 300 ரூபாய் செலுத்தி பேருந்திலேயே விரைவான தரிசன டிக்கெட்டைப் பெறலாம். இந்த விரைவு தரிசனம் தினமும் காலை 11.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலை பேருந்து நிலையத்தை அடைந்ததும் RTC மேற்பார்வையாளர்கள் பயணிகளுக்கு விரைவாக தரிசனம் செய்ய உதவுவார்கள். எனவே, திருப்பதி செல்லும் பயணிகள் முதலில் ஆர்டிசி பஸ்களில் விரைவு தரிசன டிக்கெட் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். திருப்பதிக்கு தினமும் 650 பேருந்துகளை APSRTC இயக்குகிறது. திருப்பதிக்கு ஒவ்வொரு டெப்போவிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. பெங்களூர், சென்னை, காஞ்சி, வேலூர், பாண்டிச்சேரி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து தெய்வீக தரிசனத்திற்காக வரும் பயணிகளுக்கு இது மிகவும் நல்ல வசதி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications