திருப்பதி லட்டு பிரசாதத்தில் குட்கா பாக்கெட்டா? பொய் என மறுக்கும் திருமலை தேவஸ்தானம்
திருப்பதி: திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததாக அதிர்ச்சி சம்பவம் வெளியான நிலையில் அதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்ததுடன் அதுபோன்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் கம்மத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீடியோவில் திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததாக தெரிவித்திருந்தார். ஏற்கெனவே லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது குட்கா பொட்டலம் என்ற புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் லட்டில் குட்கா பொட்டலம் என்ற புகார் சொன்ன அந்த பெண் வீட்டிற்கே சென்று தேவஸ்தான அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள பதிவில் ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தில் குட்கா பேப்பர் இருந்ததாக சிலர் சமூகவலைதளங்களில் தகவலை பரப்பி வருவது தவறானது.
திருமலையில் லட்டுக்கள் அதிக அளவில் வைஷ்ண பிராமணர்களால் தயாரிக்கப்படுகிறது. அவர்கள் ஒழுக்கம், கடவுள் பக்தி, பாரம்பரிய முறையை பின்பற்றுதல் போன்ற குணங்களை உடையவர்கள். இந்த லட்டு தயாரிப்பு பணிகள் அனைத்து கோணங்களிலும் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அப்படியிருக்கையில் லட்டு பிரசாதத்தில் குட்கா பேப்பர் இருந்ததாக வதந்தி கிளப்புவது துரதிருஷ்டவசமானது. எனவே பக்தர்கள் இது போன்ற பொய் செய்திகளையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்மத்தை சேர்ந்த பத்மா என்ற பக்தர்தான் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அவர் கடந்த 19ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு சென்று லட்டு பிரசாதம் வாங்கினாராம். இதையடுத்து வீட்டிற்கு வந்து உறவினர்களுக்கு கொடுப்பதற்காக லட்டை உடைத்துள்ளார்.
அப்போது குட்கா பாக்கெட்டும் குட்கா துகள்களும் இருந்ததாம். மேலும் அந்த லட்டில் குட்கா வாடையும் வீசியதாம். இந்த வீடியோ தற்போது வைரலானது. திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்து அந்த சர்ச்சை முடிவதற்குள் திருப்பதி லட்டு தொடர்பாக இன்னொரு அதிர்ச்சி வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications