Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனம் போல மாங்கல்யம்.. சுகமான வாழ்வு வேண்டுமா?.. துளசி பூஜை செய்யுங்கள்.. துன்பங்கள் தொலையும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருள். துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர் என்பது நம்பிக்கை. வீட்டில் துளசிமாடம் இல்லாதவர்கள் பெருமாள் கோவிலில் உள்ள துளசி மாடத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகமான வாழ்வு கிட்டும்.

துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார். அதனால் துளசிக்கு விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் உண்டு. கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

Tulsi Pooja importance and Benefits for good luck and Fortune

நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.

துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரம் என்பது ஐதீகம். சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்து வணங்குவது சிறப்பு.

மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர்.

துளசி விவாகம் குறித்து புராண கதை ஒன்று உள்ளது. மகாவிஷ்ணுவை மணாளனாக அடைவதற்காக பிருந்தை என்ற பெண் தவமிருந்தாள். அவள் தவத்தினைப் போற்றிய திருமால், "உன் விருப்பம் இந்தப் பிறவியிலும் அடுத்த பிறவியிலும் நிறைவேறாது. அதற்கடுத்த பிறவியில் நிறைவேறும்'' என்றருளினார். அதன்படி பிருந்தை என்ற பெயரிலேயே பிறந்தாள்; ஜலந்திரன் என்ற அசுரனை மணந்தாள்.

ஜலந்திரன் வரங்கள் பல பெற்றவன். அதிலொன்று, "எப்பொழுது என் மனைவி கற்பை இழக்கிறாளோ, அப்போது என் மரணம் நிகழவேண்டும்' என்பதாகும். இந்த வரம் குறித்து அவன் மனைவி பிருந்தையும் அறிவாள். ஜலந்திரனின் அட்டகாசம் அதிகமானதால் அவனை சம்ஹாரம் செய்ய வேண்டிய நிலை சிவபெருமானுக்கு ஏற்பட்டது. ஜலந்திரனுக்கும் சிவபெருமானுக்கும் போர் நடந்தது. இதனையறிந்த பார்வதி தன் அண்ணன் மகாவிஷ்ணுவிடம் சென்று, "ஜலந்திரனின் மனைவி கற்புள்ளவளாக இருக்கும்வரையில் அவனை அழிக்க முடியாது. ஜலந்திரனின் மனைவி பிருந்தையின் பதிவிரதாதர்மத்தை உடைத்தால்தான் சிவபெருமானால் ஜலந்திரனை வெல்லமுடியும். இதற்கு தாங்கள்தான் ஒரு உபாயம் செய்து எங்களைக் காத்தருளவேண்டும்'' என்று முறையிட்டாள்.

பார்வதிக்கு அபயம் கூறிய மகாவிஷ்ணு ஒரு முனிவராக மாறி, பிருந்தை வசித்த பாதாளலோகத்திற்குச் சென்றார். அவரை வரவேற்ற பிருந்தை, ஆசனம் அளித்து உபசரித்தாள். "மகளே, என்னை உபசரிப்பது இருக்கட்டும். உன் கணவன் சிவபெருமானுடன் புரிந்த போரில் இறந்துவிட்டான். அதைச் சொல்லத் தான் வந்தேன்'' என்று கூறி, தன் சக்தியால் மாய ஜலந்திரனை உண்டாக்கி, அவனது உடலை இரண்டு பேர் தூக்கி வரும்படி செய்தார்.

தன்முன் வைக்கப்பட்ட கணவனது உடலை நிஜமென்று நம்பி கதறி அழுதாள் பிருந்தை. அவளைத் தேற்றிய மகாவிஷ்ணு, "கவலைப் படாதே பிருந்தை. என் தவவலிமையால் உன் கணவனை உயிர்ப்பிக்கிறேன்'' என்று சொல்லி உயிர்ப்பித்தார். உயிர் பெற்றெழுந்த மாயஜலந்திரனை அரவணைத்து மகிழ்ந்தாள் பிருந்தை. அப்போது அவளுக்கு வித்தியாசமான ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. "தான் கற்புடன் இருக்கும்பொழுது தன் கணவர் எப்படி இறக்க முடியும்?' என்று யோசித்த பிருந்தை தன் எதிரே இருந்த முனிவரை உற்றுநோக்கினாள்.

"முனிவரே, மாயத்தோற்றத்தில் வந்திருக்கும் நீர் யார் என்பதை அறிந்தேன். உம் தங்கை பார்வதியைக் காப்பாற்ற, என் கணவர் போன்ற மாய உருவத்தை உண்டாக்கி என்னை கட்டிப்பிடிக்கச் செய்தீர்'' என்றதும், முனிவரான மகாவிஷ்ணு தன் சுயஉருவில் காட்சி தந்தார். இருந்தாலும் ஜலந்திரன் போன்ற மாய உருவத்திலிருந்தவனை கட்டிப்பிடித்ததால் அவள் பதிவிரதா தன்மை அகன்றது. அதனால் போர்க் களத்தில் உண்மையான ஜலந்திரன் மாண்டான்.
இதனையறிந்த பிருந்தை, "பகவானே, இந்த இழிசெயலைப் புரிந்த நீர் உன் மனைவியைப் பிரிந்து வருந்துவீர்'' என்று சாபம் கொடுத்தவள், தீ வளர்த்து, அந்தத் தீக்குண்டத்தில விழுந்து சாம்பலானாள். (பிருந்தையின் சாபத்தால்தான், மகாவிஷ்ணு ராமாவதாரத்தில் தன் மனைவி சீதையை சில காலம் பிரிந்து வருந்தினார்)

தங்கையின்மீது கொண்ட பாசத்தால் ஒரு பெண்ணின் மரணத்திற்குக் காரணமாகி விட்டேனே' என்று பிருந்தையின் சாம்பல்மீது விழுந்து கதறியழுதார் மகாவிஷ்ணு. அண்ணனின் கதறல் சத்தத்தை கயிலையில் கேட்ட பார்வதி அங்கு ஓடோடி வந்தாள். அண்ணனை தேற்றினாள்.

பிருந்தையின் சாம்பலை ஒன்றாக்கி, அதைத் துளசிமாலையாக்கி தன் அண்ணனிடம் கொடுத்தாள். "அண்ணா, பிருந்தையின் சாம்பல் துளசிமாலையாக இருக்கிறது. இதை அணிந்து கொள்ளுங்கள். பிருந்தை உங்களுக்கு இரக்கம் காட்டுவாள். அவளது முன்ஜென்ம விருப்பமும் இதனால் நிறைவேறும்'' என்றாள் பார்வதி. மகாவிஷ்ணுவும் துளசிமாலையை அணிந்துகொண்டார்.

இது பற்றி இன்னொரு புராண கதையும் உள்ளது. சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம், மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம் வந்து, "தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்'' என்றார். மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார் பகவான். அதைக் கண்ட பிருந்தை,

"பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே'' என்று துடித்தாள், "கல்மனம் கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி நதியில் கிடக்கக் கடவீர்'' என்று சாபமிட்டாள். "பிருந்தை, உன் சாபம் பலிக்கும். ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான் சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசி யாக மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய். அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்'' என்றார்.

கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில் ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசிதான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் துளசி தெய்வீக சக்தி கொண்டது.

துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள். எனவே துளசி இலையுடன் கூடிய நீர், கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது. ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்கவேண்டும். பௌர்ணமி, அமாவாசை, துவாதசி திதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி, நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது. குளிக்காமலும் துளசி இலையைப் பறிக்கக்கூடாது. வீட்டில் துளசிமாடம் இல்லாதவர்கள் பெருமாள் கோவிலில் உள்ள துளசி மாடத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகமான வாழ்வு கிட்டும்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மிகவும் போற்றக்கூடிய துளசி மாடம் ஒன்றுள்ளது. இது மற்ற துளசிமாடத்தைவிட மாறுபட்டது. ஆமையின் திருவுருவத்தின்மேல் அமைந்துள்ளது இந்தத் துளசி மாடம். இதன் அருகில் வில்வமரமும் உள்ளது. இந்தத் துளசி மாடத்தை கன்னிப் பெண்கள் விளக்கேற்றி வழிபட, அவர்களுக்குப் பிடித்தமான வரன் அமையும்; சுமங்கலிகள் நீடூழி வாழ்வர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+