வைகுண்ட ஏகாதசி..திருப்பதியில் 11 நாட்களில் ரூ.42 கோடி வருமானம்..லட்டு பற்றி தேவஸ்தனம் ஸ்வீட் நியூஸ்
திருப்பதி:
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு ஆகியவற்ற முன்னிட்டு 11 நாட்களில் ஏழுமலையானுக்கு 42 கோடியே 88 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக வருமானம் கிடைத்துள்ளது. பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் நாட்களில் விரைவில் லட்டு பிரசாதம் வழங்க 30 லட்டு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவிற்கு அடுத்தபடியாக பத்து நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஜனவரி 2ஆம் தேதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது முதல் புதன்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருந்தது. கடந்த 11 நாட்களில் ஏழுமலையானை 7,08,000 பக்தர்கள் தரிசித்தனர். அவர்களில் 2,10,000 பேர் தலைமுடியை காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 11 நாட்களில் ஏழுமலையானுக்கு 42 கோடியை 88 லட்ச ரூபாய் காணிக்கை வருமானம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் மூடப்பட்டது. இனி இந்த ஆண்டு இறுதியில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது சொர்க்கவாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் தற்போது 24 மணி நேரமும் 50 லட்டு கவுண்டர்கள் மூலம் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுகிறது. ஆனாலும் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் நாட்களில் லட்டு வாங்குவதற்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக விரைவில் மேலும் 30 லட்டு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியுள்ளார்.
பக்தர்கள் தங்கும் அறைகளில் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து பேசிய தர்மா ரெட்டி, திருப்பதி மலையில் பக்தர்கள் தங்குவதற்காக 7500 அறையில் உள்ளன. அவற்றில் 5 ஆயிரம் அறைகள் 50 ரூபாய் 100 ரூபாய் வாடகையாக உள்ளது. அந்த அறைகளை சாதாரண பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். அவற்றின் வாடகையை நாங்கள் உயர்த்தவில்லை. அந்த அறைகளில் சுமார் 45 ஆயிரம் சாதாரண பக்தர்கள் இன்னமும் தங்கி செல்கின்றனர்.
மற்ற அறைகள் விஐபி பகுதியில் உள்ளன. அவற்றில் 172 அறைகளை 120 கோடி ரூபாய் செலவு செய்து மேம்படுத்தினோம். புதிதாக மேம்படுத்தப்பட்ட அறைகளில் தற்போது வாட்டர் ஹீட்டர், ஏர் கண்டிஷன், தரமான கட்டில், மெத்தை ஆகியவை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த அறைகளின் வாடகை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பதி மலையில் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுவதை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். சாதாரண பக்தர்கள் வசதிக்காக திருப்பதி மலையில் இன்னும் ஒரு மெகா மண்டபம் கட்டுமான பணி நடைபெற உள்ளது என்றும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.