ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி.. 23ல் சொர்க்கவாசல் திறப்பு.. மூலவர் முத்தங்கி சேவை.. நம்பெருமாள் தரிசனம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு 23ஆம் தேதி அதிகாலையில் நடைபெற உள்ளது. நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 12ஆம் தேதி வெகு விமர்சையாக தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் திருமொழி திருவிழா 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

பகல் பத்தின் முதல் நாள் முதல் மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். பகல்பத்து உற்சவத்தின் 10வது நாளான வருகிற 22ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
23ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
23ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 29ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 23ஆம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. இதேபோல் ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 29ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும் நடைபெறும்.
எட்டாம் திருநாளான 30ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெறும். 30ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. பத்தாம் திருநாளான ஜனவரி 1ஆம் தேதி தீர்த்தவாரியும், 2ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும், இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடையும்.












Click it and Unblock the Notifications