விநாயகர் சதுர்த்தி கோலாகலம்.. காலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள்.. தலைவர்கள் வாழ்த்து
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு, புதுச்சேரியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயங்களில் பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளனர்.
முழுமுதற்கடவுளாம் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமானோர் விநாயகரை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் பிரபல விநாயகர் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. திருச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மாலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக குவிந்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று முக்குறுணி விநாயகருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
கடந்த வாரம் வரை 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ விலையில் இன்று 1000 ரூபாய் அதிகரித்து ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இருநூறு ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சம்பங்கிப்பூ இன்று நானூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை, சாமந்தி, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது வாழ்த்துச்செய்தியில் எந்த ஒரு புதிய முயற்சியை தொடங்கும்போதும் விநாயகரை வணங்கி தொடங்கப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா அனைவரது வாழ்விலும் ஆரோக்கியத்தையும், அமைதியையும், செழிப்பையும் அளிக்க வேண்டும். பாரத தேச மக்கள் அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச்செய்தியில் கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாக கருதப்படும் வேழமுகத்து விநாயக பெருமானின் திருவருளால், நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருநாவுக்கரசர் எம்பி தனது வாழ்த்துச்செய்தியில் முழுமுதற் கடவுளாம் விநாயகர் அவதரித்த இந்நாளை விநாயகர் சதுர்த்தி என கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் மக்கள் தங்கள் இல்லத்திற்கு விநாயகர் உருவச்சிலை வாங்கி வந்து அலங்காரம் செய்து, அவருக்கு பிடித்தமான பல பலகாரங்களை செய்து படைத்து, உண்டு மகிழ்வர். காக்கும் கடவுள் கணேசன் அருளால் அனைவரது வாழ்வு சிறக்கவும், மகிழ்ச்சி பொங்கவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications