விநாயகர் சதுர்த்தி.. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கோலாகல கொடியேற்றம்.. 18ல் தேரோட்டம்
சிவகங்கை: காரைக்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் அனைத்து நாட்களிலும் விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 18ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.
பிள்ளையார்பட்டி விநாயகர் சிவ பூஜை செய்யும் கோலத்தோடு வீற்றிருப்பதால், இந்தச் சந்நிதியில் மந்திர தீட்சைப் பெறலாம் என்பது சிறப்பு. இங்கு மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்துவந்தால் அதன் பலனை விரைவிலேயே அருள்வார் ஸ்ரீகற்பக விநாயகர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கேட்ட வரம் தரும் கற்பக விநாயகரை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நேற்று சதுர்த்தி விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, மூஞ்சுறு வாகன கொடி படத்துடன் சண்டிகேஸ்வரர் கோயிலை வலம் வந்தார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சந்தனம், மஞ்சள், வாசனைத் திரவியங்கள், பால், புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி வெள்ளிக் கேடகத்திலும், இரவில் சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார். வரும் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு கஜமுக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18ஆம் தேதி காலை கற்பக விநாயகர் தேரில் எழுந்தருளுகிறார். மாலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
பிள்ளையார்பட்டியில், விநாயக சதுர்த்தியன்று விநாயகருக்கு 18 படி (முக்குறுணி) அரிசியைக் கொண்டு, கொழுக்கட்டை தயாரிக்கிறார்கள். 18 படி அரிசி மாவு, 2 கிலோ எள், கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, வெல்லம், ஏலக்காய் முதலியன கொண்டு பிரசாதம் தயாரித்து விநாயகருக்குப் படைத்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
தொடர்ந்து, வரும் 19ஆம் தேதி காலை கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், பிற்பகல் 2 மணிக்கு மூலவருக்கு முக்குறுணி மோதக படையல் நிகழ்ச்சியும், இரவில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடைபெறுகின்றன. விழா நாட்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள், இசை, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications