800 ஆண்டு பழமைவாய்ந்த சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில் சிவலிங்கத்தின் மீது இனி சூரிய ஒளி விழும்!
சென்னை: சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் சிவலிங்கத்தின் மேல் சூரிய கதிர்கள் மீண்டும் விழ வைக்க ரூ,1.98 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த கோயில் 800 ஆண்டுகள் பழமையானது.
சென்னை வியாசர்பாடியில் இரவீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் பழமையானது. இங்கு 1970, 1980, 2000, 2005, 2013 ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரிய கதிர்கள் காலை நேரத்தில் நந்தி பகவான் வழியாக நேரடியாக சிவலிங்கத்தின் மேல் விழுந்துள்ளது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற நிகழ்வு நடைபெறவில்லை. இதுகுறித்து தொல்லியல் துறை கோயிலை ஆய்வு செய்தது. அப்போது இந்த கோயில் தரைதளத்தில் இருந்து 5 அடி ஆழ பள்ளத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால்தான் சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழவில்லை. கோயிலை உயர்த்தி வைத்தால் மீண்டும் சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும் என தொல்லியல் துறை ஆய்வறிக்கை தாக்கல் செய்தது.
இதன் அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கோயிலை உயர்த்த முடிவெடுக்கப்பட்டு உபயதாரர்நிதியாக ரூ 1.43 கோடியும் கோயில் நிதியாக ரூ 50 லட்சமும் , என ரூ 1.98 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பணிகளுக்கான பாலாலயம் எனப்படும் ஆரம்பப் பணிகளை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்த இரவீஸ்வரர் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோயில் பல அதிசயங்களையும் புராண பின்னணியையும் கொண்டது. ஒரு முறை பிரம்ம தேவரின் கோபத்திற்கு ஆளாகி சூரியபகவான் பூமியில் பிறந்தார். நாரதரின் ஆலோசனைபடி இங்கு வந்து வன்னி மரத்தடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஒரு தீர்த்தத்தை உருவாக்கி சிவபெருமானை வழிபட்டார்.
பிரார்த்தனையில் மகிழ்ந்த சிவபெருமான் சாபவிமோசனம் அளித்து அருளினார். இதன் காரணமாக இந்த கோயில் மூலவரான சிவபெருமான் ஸ்ரீரவீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ரவி என்றால் சூரியன். ஈஸ்வரன் மீது சூரிய கதிர்கள் விழுவதுதான் அவருக்கு செய்யப்படும் முதல் பூஜையாகும்.
இந்த கோயிலில் அறியாமல் செய்த பாவங்கள் முன் ஜென்ம பாவத்திலிருந்தும் விமோசனம் வழங்குகிறார் ரவீஸ்வரர். திருமணம் ஆகாத பக்தர்கள், குழந்தைச் செல்வம் பெற வேண்டுமென வேண்டிக் கொள்வார்கள். வேண்டுபவர்களுக்கு வேண்டியதை அருளும் வியாசர்பாடி ரவீஸ்வரரை ஞாயிற்றுக்கிழமையில் சென்று தரிசிக்கலாம்.












Click it and Unblock the Notifications