Akshaya Tritiya: அட்சய திருதியை 2025 எப்போது? தமிழகத்தில் தங்க நகைகள் வாங்க நல்ல நேரம் எது?
சென்னை: இந்த ஆண்டு அட்சய திருதியை எப்போது கொண்டாடப்படுகிறது. தங்கம் வாங்க நல்ல நேரம் எது என்பதை பார்க்கலாம். தங்கம் விற்கும் விலைக்கு தங்கம் வாங்க முடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
அட்சய திருதியை என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு 3ஆவது நாளில் வரும் திருதியை திதியில் கொண்டாடப்படுவதாகும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வீட்டு கிரகபிரவேசம் செய்வது என்பது பலனை தரும். இந்த நன்னாளில் சுபகாரியங்களையும் செய்யலாம்.
அட்சய திருதியை எப்போது?
அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5.31 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 30-ஆம் தேதி பிற்பகல் 2.12 மணிக்கு முடிகிறது. எனவே வழிபாடு செய்ய உகந்த நேரம் ஏப்ரல் 30ஆம் தேதி காலை 5.41 மணி முதல் 12.18 மணி வரை ஆகும்.
இந்த நாளில் லட்சுமி தேவியையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டால் மகிழ்ச்சி பெருகும். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக இருக்கும். அது போல் வெள்ளி கூட வாங்கலாம்.
தங்கம் வாங்க உகந்த நேரம்
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தங்கம் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். அந்த வகையில் ஏப்ரல் 30ஆம் தேதி காலை 5.41 மணி முதல் பிற்பகல் 2.12 மணி வரை தங்கம் வாங்க உகந்த நேரம் ஆகும். அது போல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலையே திருதியை பிறப்பதால் அன்றைய தினமும் தங்கம், வெள்ளி நகை வாங்கலாம்.
ஒரு குண்டுமணி
ஒரு குண்டுமணி பவுனாவது வாங்க வேண்டும் என்பது ஐதீகம். இதை ஆண்டுதோறும் வாங்குவோரின் அனுபவத்தை கேட்டால், அவர்களுக்கு ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டதால் ஆண்டுதோறும் நகை வாங்குகிறோம். அதனால் தங்கம் சேரத்தான் செய்கிறது என்கிறார்கள்.
தங்கம் வெள்ளி
பெரிய கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளை முன் கூட்டியே ஆர்டர் கொடுத்து அதை அட்சய திருதியை நாளில் வாங்கிக் கொள்ளலாம். அந்த நாளில் தங்கம் வாங்க ஏராளமானோர் குவிவதால் பில் போட நள்ளிரவை தாண்டும் நிலை உள்ளது. இந்த முறை பகலிலேயே திருதியை முடிவதால் அன்றைய தினம் பகல் நேரத்தில் நகைக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 66,480-க்கு விற்பனையாகிறது. அது போல் கிராமுக்கு ரூ 90 குறைந்து, ஒரு கிராம் ரூ 8,310-க்கு விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக சவரனுக்கு ரூ 2000 குறைந்துள்ளது. இதனால் தற்போது கூட தங்கம் வாங்க மக்கள் கூட்டம் நகைக் கடைகளில் அலைமோதுகிறது.
ரூ 15 ஆயிரம் கோடி விற்பனை
கடந்த 2024 ஆம் ஆண்டு அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் விற்பனை நடந்தது என சென்னை தங்க நகை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக் கடை உள்பட தமிழகத்தில் 45 நகைக் கடைகளில் ஒரே நாளில் 15 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டை காட்டிலும் இது அதிகம் ஆகும். அந்த ஆண்டு வெறும் 11 ஆயிரம் கோடிக்குத்தான் தங்கம் விற்பனையானது. இது கடந்த 2024 ஆம் ஆண்டை விட 20 முதல் 30 சதவீதம் வரை அதிகம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications