திருப்பரங்குன்றம் கோயிலில் துவங்கியது யாகசாலை பூஜை.. ஜூலை 14 இல் கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 14 ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை மங்கள இசை இசைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சூரியனிடமிருந்து அக்னி எடுக்கும் நிகழ்ச்சியும், கலாகர்சனம், யாகசாலை நிர்மாணமும் நடைபெற்றது. தற்காலிக மூலவர் சன்னதியில் தங்கம், வெள்ளியினாலான குடங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டது.

புண்ணியாகவாசனம், முளைப்பாரி இடிதல் நிகழ்ச்சிக்குப் பின்னர் காப்பு கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதல் கால யாகசாலை பூஜை நேற்று மாலை தொடங்கியது. முதல் கால யாகசாலை பூஜையை தருமை ஆதினம் நட்சத்திர குருமணி கயிலை மாசிலாமணி தேசிகர், கூனம்பட்டி ஆதினம் சரவண மாணிக்க வாசக சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த 8 கால யாகசாலை பூஜையானது கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான ஜூலை 14 ஆம் தேதி அதிகாலை வரை நடைபெறவுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம் செய்யப்படும். பின்னர், யாக சாலை பூஜை செய்யப்படும். அங்கிருந்து புனிதர் குடங்கள் கோபுர கலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 5.25 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு 25 குண்டங்கள், சத்யகிரீஸ்வரருக்கு 9 குண்டங்கள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு 9 குண்டங்கள், கற்பக விநாயகருக்கு 5 குண்டங்கள் 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சுவாமிகளுக்கு வெள்ளிக் குடங்கள், பித்தளை சொம்புகள், பித்தளைக் குடங்களில் புனிதநீர் நிரப்பி யாகசாலையில் பூஜை செய்யப்பட்டு வருகின்றன. 96 வகையான மூலிகைகள், திரவியங்கள், ஒன்பது வகையான சமித்துகள் உள்ளிட்டவை வைத்து பூஜை செய்யப்படுகிறது. இந்த யாகசாலை பூஜையில் சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள், நாதஸ்வர கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஓதுவார், சிவாச்சாரியரிடையே தள்ளுமுள்ளு
இந்த யாகசாலை பூஜையில் தமிழ் ஓதுவார்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற பிரச்சனை கிளம்பியுள்ளது. யாகசாலை பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ் பெண் ஓதுவார்கள் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். இதனைப் பார்த்த சிவாச்சாரியர்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், ஓதுவார்களுக்கும், சிவாச்சரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து பெண் ஓதுவார் ஒருவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் கோயிலில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால், அந்த யாகசாலையில் தமிழ் வேள்வியாளர்கள் இல்லை. இதனை ஆய்வு செய்வதற்காகச் சென்றபோது அங்கிருந்த சிவாச்சாரியார்கள் எங்களை தடுத்து நிறுத்தினர். பிராமண சமஸ்கிருத வேள்வியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். தமிழ் வேள்வியாளர்களை யாகசாலை பூஜைகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications