அதிமுக ஆட்சிக் கால சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாஜி இயக்குநர் விஜயராகவன் மீது மோசடி வழக்கு!
சென்னை: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜி. விஜயராகவன் மீது ரூ12 லட்சம் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசின் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஜி. விஜயராகவன்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக விஜயராகவன் இருந்த போது அதிமுக ஆட்சியில் 2014-ம் ஆண்டு ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு ரூ24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த ஓலைச் சுவடி பாதுகாப்பு பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம், இத்துறைக்கு தொடர்பே இல்லாதது; ஒப்பந்தம் கோரப்பட்டதற்கு 2 நாட்களுக்கு முன்னர்தான் பதிவு செய்யப்பட்டது என்கிற சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் மீது விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநர் விஜயராகவன் ரூ12 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அரசியல் சர்ச்சைகளில் சிக்காமல் பல்வேறு ஆய்வுப் பணிகளை, பட்டய, சான்றிதழ் படிப்புகளை வழங்கி வந்தது. முன்னாள் இயக்குநர் விஜயராகவன் பணி காலத்தில் அதிமுக சார்பு நடவடிக்கைகள் அதிகம் இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் விஜயராகவன் மீது தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்: இந்த நிறுவனத்தின் நோக்கமாக அதன் இணையப் பக்கத்தில், தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications