"கல்யாணம் இருக்குனு மெசேஜ் வரும்.." கை வைச்சாலே பல லட்ச ரூபாய் காலி! மிரளவிடும் புதுவித மோசடி
டெல்லி: இணையத்தில் இப்போது பல்வேறு வகையான மோசடிகள் நடந்து வருகிறது. பார்சல் மோசடி என்ற பெயரில் இப்போது பல நூறு பேரை குறிவைத்து பெரியளவில் மோசடி நடந்து வருகிறது. அதைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இப்போது புதுவித மோசடி ஆரம்பித்துள்ளது. வாட்ஸ்அப் திருமண மோசடி எனப்படும் இந்த மோசடியில் பலரும் பணத்தை இழந்து வருகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த நவீன உலகில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை இப்போது அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்ய முடிகிறது.

முன்பெல்லாம் நாம் ரொம்பவே தேடி அலைய வேண்டிய தகவல்கள் கூட இப்போது நமக்கு விரல் நுனியில் கிடைக்கிறது. இப்படி டிஜிட்டல் தொழில்நுட்பம் நமது வாழ்க்கை முறையை மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது என்றே சொல்லலாம்.
டிஜிட்டல் தொழில்நுட்பம்: அதேநேரம் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது இரண்டு முனை கத்தி போன்றது. இதில் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ.. அதே அளவுக்கு ஆபத்துகளும் உள்ளன. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலவித மோசடிகள் அரங்கேறி வருகிறது. ஒரு மோசடியைக் கண்டறிந்து அதில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தால்.. உடனடியாக இன்னொரு வழியில் சைபர் மோசடி நடக்கிறது. இப்படி இது ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது.
இப்போது பலரும் பார்சல் மோசடியில் தான் ஏமாறுகிறார்கள். அதாவது திடீரென ஒரு நம்பரில் இருந்து கால் வரும். நமது பெயரில் உள்ள பார்சலில் வெடிகுண்டு இருப்பதாகச் சொல்லி நம்மை மிரட்ட ஆரம்பிப்பார்கள். தங்களை போலீஸ் அதிகாரி போலக் காட்டிக் கொள்ளும் அவர்கள் மிரட்டுவார்கள். போலியான நீதிமன்ற உத்தரவுகளை எல்லாம் மிரட்டி பணம் பறிப்பார்கள்.
மோசடி: இப்படிப் பல நூறு பேரிடம் மோசடி நடந்துள்ளது. இதுபோல எந்தவொரு ஃபோன் காலும் வராது.. இதில் ஏமாற வேண்டாம் என்று போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், சிலரைக் கைது செய்துள்ளனர். இந்த மோசடியே இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், இப்போது புதுவித மோசடியை ஆரம்பித்துவிட்டார்கள். அதுதான் கல்யாண அழைப்பிதழ் மோசடி.
கவனம்: அதாவது நமக்கு திடீரென ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ்அப்பில் சில மெசேஜ்கள் வரும். அது பார்க்க வழக்கமான உள்ளூர் நம்பர் போலவே இருக்கும். மெசேஜ் ஓபன் செய்து பார்த்தால்.. தனக்குத் திருமணம் இருப்பதாகச் சொல்லி சில வரி மெசேஜ் இருக்கும். கூடவே திருமண பத்திரிக்கை என்று சொல்லி ஒரு ஃபைலை அனுப்பி இருப்பார்கள். அது APK ஃபார்மெட்டில் இருக்கும். நாமும் சரி திருமண பத்திரிக்கை தானே என அதை டவுன்லோட் செய்தால் அவ்வளவு தான்.. மொபைலை ஹாக் செய்துவிடுவார்கள்.
சிலர் புதிய நபர்கள் அனுப்பும் ஃபைலை டவுன்லோட் செய்ய மாட்டார்கள். அவர்களை ஏமாற்றவும் இன்னொரு வழியை வைத்துள்ளனர். அதாவது உங்களுடன் பள்ளி அல்லது கல்லூரியில் உடன் படித்த நண்பரைப் போல சில மெசேஜ்களை அனுப்புவார்கள். அதன் பிறகு தனக்குக் கல்யாணம் எனச் சொல்லி ஏபிகே ஃபைலே அனுப்புவார்கள்.
நீங்களே அதை டவுன்லோடு செய்தாலே மொபைலின் மொத்த கன்ட்ரோலும் அவர்களுக்குப் போய்விடும். நமது மொபைலுக்கு வரும் மெசேஜ், கால் என அனைத்தையும் அவர்களால் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். இருக்கும் தகவல்களையும் படிக்க முடியும். இதன் மூலம் நமது வங்கியில் இருக்கும் பேலன்ஸ்ஸை மொத்தமாக காலி செய்துவிடுவார்கள்.
பாதுகாப்பாக இருக்க ஒரே வழி: எனவே, இதுபோன்ற மோசடிகளில் கவனமாக இருங்கள். முன்பின் தெரியாத நபர்கள் ஏபிகே ஃபைலை தப்பித் தவறியும் அதை டவுன்லோடு செய்ய வேண்டாம். அதுவே நீங்கள் பாதுகாப்பாக இருக்க ஒரே வழியாகும்.












Click it and Unblock the Notifications