மைக்ரோசாப்ட்டால் வந்த வினை.. திடீரென முடங்கிய சாட்ஜிபிடி! பதறிய யூசர்கள்.. என்ன நடந்தது!
வாஷிங்டன்: இப்போது உலகின் மிக முக்கிய ஏஐ நிறுவனமாக இருக்கும் சாட்ஜிபிடி இந்திய நேரப்படி நேற்று இரவு நள்ளிரவு திடீரென முடங்கியது. இதனால் அமெரிக்கா உட்பட உலகெங்கும் இருக்கும் பல யூசர்களால் சாட்ஜிபிடியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. சாட்ஜிபிடி இதுபோல முடங்குவது தொடர்ந்து வரும் நிலையில், இதனால் யூசர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பொருள் அல்லது ஒவ்வொரு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும். கணினி, செல்போன் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோல ஒவ்வொரு விஷயம் வளர்ச்சி அடைந்தது.

அதுபோல தான் இப்போது ஏஐ அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இது தொடர்பான ஆய்வுகள் நடக்கிறது என்ற போதிலும் இப்போது தான் இந்த துறை வேகமாக வளர தொடங்கியுள்ளது.
சாட்ஜிபிடி:
அதிலும் குறிப்பாக சாட்ஜிபிடியின் வருகை என்பது ஏஐ துறையை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. கடந்த 2022 இறுதியில் சாட்ஜிபிடி வெளியான நிலையில், அது உடனடியாக ஹிட் அடித்தது. பல கோடி பேர் சாட்ஜிபிடியை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது இலவசம் மற்றும் சந்தா முறை என இரண்டு வழிகளில் சாட்ஜிபிடி தனது சேவையை வழங்கி வருகிறது.
இதற்கிடையே சாட்ஜிபிடி மிக பெரியளவில் முடங்கியுள்ளது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் உலகெங்கும் உள்ள சாட்ஜிபிடி பயனாளர்கள் அதைப் பயன்படுத்த முடியாமல் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். பல யூசர்களுக்கு இன்டர்னல் சர்வர் எரர் என்ற மெசேஜ் வந்ததாகவும் கூறப்படுகிறது.
முடங்கியது:
அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் சாட்ஜிபிடி முடங்கியுள்ளது. மதிய நேரம் என்பதால் அங்குப் பலரும் சாட்ஜிபிடியை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த பிரச்சினை சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் அதன் பிறகே இது மெல்லச் சீராகத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
தனது அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக சாட்ஜிபிடி கூறினாலும், அது என்ன மாதிரியான பிரச்சினை என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. அதேநேரம் சாட்ஜிபிடியின் பிரத்தியேக கிளவுட் வழங்குநரான மைக்ரோசாப்ட், அதன் டேட்டா சென்டர்களில் ஒன்றில் "பவர் சிக்கல்" ஏற்பட்டதாகத் தெரிவித்தது. இதன் காரணமாகவே ஓபன் ஏஐ முடங்கியதாகக் கூறப்படுகிறது.
முதல்முறை இல்லை:
அதேநேரம் சாட்ஜிபிடி இதுபோல திடீரென முடங்குவது இது முதல்முறை இல்லை.. ஏற்கனவே கடந்த டிச. 11ம் தேதி சாட்ஜிபிடி இதேபோன்ற பிரச்சினையை எதிர்கொண்டது. அன்றைய தினம் தான் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐஓஎஸ் 18.2 அப்டேட்டை வெளியிட்டது. அதில் சாட்ஜிபிடி உடன் கூடிய சிரி கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், முதல் நாளே சாட்ஜிபிடி முடங்கியதால் பலராலும் அதை பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல கடந்த நவ. மாதமும் சாட்ஜிபிடி ஓரிரு முறை டெக் பிரச்சினையால் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
சாட்ஜிபிடி:
இப்போது உலகெங்கும் சுமார் 25 கோடிக்கும் மேற்பட்டோர் சாட்ஜிபிடியை ஆக்டிவாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாட்ஜிபிடியின் மதிப்பும் உச்சத்திற்குச் சென்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு அதன் சந்தை மதிப்பு $14 பில்லியனாக இருந்த நிலையில், இப்போது அது $157 பில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும், அதன் வருவாய் ஜீரோவில் இருந்து $3.6 பில்லியனாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications