ஐடி துறைக்கு தான் ஆப்பு..10000 பேர் கனவில் மண்ணை அள்ளிப் போட்ட டெல்! இன்னும் தலைக்கு மேல் கத்தி தான்
சென்னை: உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவி வரும் மந்தநிலையின் தாக்கம் தொடர்ந்து வெளிப்பட்டு வரும் நிலையில், முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Dell Technologies கடந்த ஓராண்டில் மட்டும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணிநீக்கம் வெளியில் யாருக்கும் தெரியாமல் மிக அமைதியான முறையில் நடைபெற்றதாக கூறப்படுவது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இந்த தகவல் டெல் நிறுவனத்தின் சமீபத்திய '10-K' அறிக்கையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி, 2025-26 நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் சுமார் 10 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துதல், செலவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற காரணங்களே இந்த முடிவுக்கு பின்னணியாகக் கூறப்படுகின்றன.

டெல் பணிநீக்கம்
தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் முக்கிய துறையாகும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக பொருளாதார மந்தநிலை, புதிய ப்ராஜெக்ட்களின் குறைவு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக, இந்த துறையில் வேலைவாய்ப்பு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முக்கிய சந்தைகளில் முதலீடுகள் குறைந்திருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ஐடி வேலை இழப்பு
டாடா கன்சல்டன்சி, இன்ஃபோசிஸ், விப்ரோ,டெக் மகிந்திரா போன்ற இந்திய நிறுவனங்களும் கடந்த காலத்தில் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள், புதிய நியமனங்கள் தாமதம், செலவு கட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த நிறுவனங்களும் பணியாளர் எண்ணிக்கையை குறைத்துள்ளன. இதோடு, உலகளாவிய அளவில் கூகுள், மெட்டா, அமேசான், மைக்ரோ சாப்ட் போன்ற மிகப் பெரிய ஐடி நிறுவனங்களும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏஐ காரணமாக வேலை இழப்பு
இந்த பணிநீக்கங்களுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகளில் ஒன்று ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியாகும். முன்பு பலர் சேர்ந்து செய்த பணிகளை, தற்போது சிலவற்றை அல்லது முழுமையாக மெஷின்களே செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மனித வளத் தேவைகள் குறைந்து வருகின்றன. அதேசமயம், நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க செலவுகளை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.
ஐடி துறை மந்தநிலை
இந்த சூழலில் டெல் நிறுவனம் இந்த முடிவு, தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவி வரும் சவால்களை தெளிவாக காட்டுகிறது. எதிர்காலத்தில் வேலைவாய்ப்பில் மாற்றங்கள் அதிகரிக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது. புதிய திறன்களை கற்றுக் கொள்வது மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு தங்களைத் தயார் செய்து கொள்வது இன்றைய இளைஞர்களுக்கு அவசியமாகியுள்ளது.
வேலை பாதுகாப்பு
ஐடி துறையின் பணி நீக்கங்கள் பல இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதித்துள்ளது உண்மைதான். ஆனால் அதே சமயம், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளும் முனைப்பும், திறன்களை மேம்படுத்தும் ஆர்வமும் இருந்தால், அடுத்த கட்ட வேலை வாய்ப்புகளை எளிதாகப் பெறலாம். உலக தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுவது போல், பணி நீக்கங்களைக் கண்டு அஞ்சாமல், எதிர் கால தொழில்நுட்ப வாய்ப்புகளுக்குத் தயாராக இருப்பதே சரியான தீர்வு என்கின்றனர் மனிதவள நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications