அவ்வளவு தான்.. மொத்தமாக முடிவுக்கு வரும் ஜிமெயில் சேவை? நெட்டிசன்கள் அதிர்ச்சி! கூகுள் சொல்வது என்ன
டெல்லி: கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன எ்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கூகுள் நிறுவனம் இப்போது நமக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் முக்கியமான கூகுளின் ஜிமெயில் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் இந்த ஜிமெயில் சேவையைப் பயன்படுத்துகிறார்கள்.

ஜிமெயில்: இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தகவல் ஒன்று படுவேகமாக பரவியது. அதாவது இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி உடன் ஜிமெயில சேவை நிறுத்தப்படுவதாகத் தகவல் பரவியது. இது தொடர்பாகக் கூகுள் நிறுவனம் ஜிமெயில் யூசர்களுக்கு மெயில் அனுப்பியது போன்ற ஸ்கிரீன்ஷாட்டும் இணையத்தில் டிரெண்ட் ஆனது. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஜிமெயில் மூலம் நம்மால் மெயிலை அனுப்பவோ பெறவோ முடியாது என்பது போல அதில் கூறப்பட்டு இருந்தது.
மேலும் அந்த ஸ்கிரீன்ஷார்ட்டில், "உலகளவில் பல கோடி பேரை இணைத்து, தடையற்ற தகவல் தொடர்புகளைத் தந்து, பல ஆண்டுகள் எண்ணற்ற சேவைகளை வழங்கிய பிறகு, ஜிமெயிலின் பயணம் முடிவடைகிறது. ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜிமெயில் சேவை முடிவுக்கு வருகிறது. அதாவது அன்று முதல் ஜிமெயில் மூலம் மின்னஞ்சல்களை அனுப்ப, பெற அல்லது சேமிக்க முடியாது" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
ஸ்கிரீன் ஷாட்: இந்த ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் படுவேகமாக பரவியது. கூகிள் நிறுவனம் அதன் ஏஐ டூலான ஜெமினியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதற்கு மக்களிடையே பெரியளவில் வரவேற்பு கிடைக்காத நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இணையத்தில் கூறப்பட்டது. சமீபத்தில் தான் இந்த ஜெமினி டூல் உருவாக்கிய நாஜி வீரர்கள் தொடர்பான போட்டோ இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் ஒவ்வொரு நாளும் பல கோடி பேரைப் பயன்படுத்தும் ஒரு சேவையாக ஜிமெயில் இருக்கும் நிலையில், இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதேநேரம் கூகுள் கடந்த காலங்களிலும் பல முறை திடீர் திடீரென தனது சேவைகளை நிறுத்தி இருந்தது. இதனால் ஜிமெயில் தொடர்பான இந்த தகவல் இணையத்தில் டிரெண்டானது. நெட்டிசன்கள் பலரும் கூகுள் இதுபோல திடீரென சேவையை நிறுத்தக் கூடாது எனப் பொங்க ஆரம்பித்தனர்.
கூகுள் விளக்கம்: இதற்கிடையே கூகுள் நிறுவனம் இந்த விவகாரத்தில் விளக்கத்தைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாகக் கூகுள் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், "ஜிமெயில் இங்கே தான் இருக்கப் போகிறது" என்று ஒரே வரியில் விளக்கமளித்துள்ளது. கூகுள் தரப்பிலிருந்து இந்த விளக்க மெயில் வந்த பிறகே நெட்டிசன்கள் நிம்மதி அடைந்தனர். இமெயில் என்றாலே பலருக்கும் ஜிமெயில் தான் நினைவுக்கு வரும் நிலையில், இதைக் கூகுள் நிறுத்தி இருந்தால் அது எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை.
மேலும், ஜிமெயில் சேவை நிறுத்தப்படுவதாக இணையத்தில் திடீரென தகவல் பரவ என்ன காரணம் என்பது குறித்தும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் ஜிமெயின் அடிப்படை வெர்ஷனான ஹெச்டிஎம்எல் (HTML) வெர்ஷனை மட்டுமே நிறுத்த முடிவு செய்துள்ளது. குறைந்த இணையச் சேவை உள்ள பகுதிகளில் மெயில் சேவையைப் பயன்படுத்த இந்த ஹெச்டிஎம்எல் வெர்ஷன் பயன்படும்.
பயனாளிகளின் சேவையை மேம்படுத்த அதை மட்டுமே நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால், அந்த தகவல்கள் தான் ஏதோ கூகுள் நிறுவனம் ஒட்டுமொத்தமாகத் தனது ஜிமெயில் சேவையை மொத்தமா நிறுத்த முடிவு செய்துள்ளது போலத் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications