கோவை தெற்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர்.. தேர்தல் முறைகேடு நடப்பதாக பல தொகுதிகளில் புகார்.. எங்கெங்கே?
சென்னை: நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் கோவை தெற்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திரு.வி.க நகர் உள்ளிட்ட தொகுதிகளில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகளிடம் பரபரப்பு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளில் முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன என்பதைப் பார்க்கலாம்..
ஜனநாயகத் திருவிழாவான தமிழக சட்டசபை தேர்தல் 234 சட்டசபை தொகுதிகளிலும் நாளை நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், பல தொகுதிகளிலும் பணப் பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

கோவை தெற்கு
கோவை தெற்கு தொகுதியில் திமுகவினரும், கரூரை சேர்ந்தவர்களும் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வீதம் பணம் பட்டுவாடா செய்து வருவதாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் நேற்று புகார் அளித்தார். கோவை தெற்கு தொகுதிக்கு கரூரில் இருந்து 2,000 பேர் வந்திருக்கின்றனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுகிறது. கரூரை சேர்ந்தவர்கள் பணம் பட்டுவாடா செய்தனர். அவர்களை பிடித்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தோம் என அவர் தெரிவித்திருந்தார்.
திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆதரவுடன் பணம் பட்டுவாடா செய்யும் கரூரை சேர்ந்தவர்களை கோவை மாவட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே தெற்கு தொகுதியில் நியாயமான முறையில், அமைதியாக, வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடத்த முடியும். ஓட்டுப்பதிவு நாளன்று தி.மு.கவினர் மற்றும் கரூர்காரர்களால் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவது மற்றும் முறைகேடு நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது. அனைத்து ஓட்டுச்சாவடியிலும் துணை ராணுவ படையை பாதுகாப்புக்கு நிறுத்தி, ஜனநாயக முறைப்படி, தேர்தலை சுமூகமாக நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் புர்கா அணிந்து கள்ள ஓட்டு பதிவு செய்ய திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தவெக வேட்பாளர் செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிக அளவில் கள்ள ஓட்டுகள் பதிவாகும் அபாயம் இருப்பதாகவும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் செல்வம் தலைமைச் செயலகத்தில் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.
சில இடங்களில் போலி வாக்காளர் அட்டைகளை வைத்து வாக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார்கள். புர்கா ஆடையில் போலி வாக்காளர்களை அனுப்பி வாக்களிக்க திட்டமிட்டுள்ளார்கள். அதிகமாக பணம் கொடுப்பதாக கூறி பூத்துகளில் வேலை செய்ய வேண்டாம் என்று மிரட்டுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார். மேலும், வாக்காளர் பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் தவெக வேட்பாளர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
திரு.வி.க நகர்
நாளை தேர்தல் நடைபெறும் பொழுது திரு.வி.க நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக திருவிக நகர் திமுக வேட்பாளர் கே.எஸ் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். தொகுதியில் வெளியாட்கள் தங்கி இருப்பதாகவும் அவர்களை உடனடியாக வெளியேற்றும்படி காவல்துறையிடம் புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் வந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வேட்பாளர் கே.எஸ் ரவிச்சந்திரன் புகார் அளித்துள்ளார்.
திருமங்கலம், ஆலங்குளம், மயிலாப்பூர்
திருமங்கலம், ஆலங்குளம் மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளில் சட்டசபை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அறப்போர் இயக்கம் மனு அளித்துள்ளது. அறப்போர் இயக்கம் அளித்துள்ள மனுவில், கடந்த 3 நாட்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ வெளிவந்துள்ளன. ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் பிரபாகரன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கச் சொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவிற்கு நெருக்கமான சத்தியமூர்த்தி வீட்டில் நடந்த சோதனையில் 79 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பணம் விநியோகம் செய்ததற்கான ஆதாரம் மற்றும் வீடியோவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரை திருமங்கலத்தில் திமுக நிர்வாகி செல்லப்பாண்டியன் என்பவரின் மகள், திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் மணிமாறனுக்கு ஆதரவாக ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்தது குறித்து பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. எனவே இந்த 3 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















Click it and Unblock the Notifications