பஞ்சதந்திரம் படத்தில் ஜெயராம்க்கு மகனாக நடித்த நடிகரா இவர்? ஆளே அடையாளம் தெரியவில்லையே! இப்போ ஹீரோ
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பலர், பின்னர் வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிடுகிறார்கள். அப்படி சமீபத்தில் இணையத்தில் பேசுபொருளாக மாறியிருப்பவர் நடிகர் பரத்.
ஒரு காலத்தில் ஜெயராம் - ஊர்வசி தம்பதியின் மகனாக "பஞ்சதந்திரம்" படத்தில் நடித்த அந்த குட்டி பையன், இன்று இளைஞனாக மாறி ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அதைவிட ஆச்சரியப்பட்டவர் ஜெயராம் தான்.

யார் இந்த இயக்குநர்?
ஜெயராம் - ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள "பரிமளா & கோ" திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், ஜெயராமுடன் பயணித்த பலரும் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது திரையில் தோன்றிய பரத்தை பார்த்த ஜெயராமுக்கு முதலில் அடையாளமே தெரியவில்லையாம்.
வீடியோ முடிந்த பிறகு பேசிய ஜெயராம், "முதல்ல யார் அதுன்னே தெரியல. ஏதோ ஒரு இயக்குநர்னு நினைச்சுட்டேன். பிறகுதான் பஞ்சதந்திரம் படத்தில் என்னோட மகனாக நடித்த பரத்துன்னு தெரிஞ்சது. அந்த படத்துக்கு பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. பயங்கரமா மாறிட்டாரு!" என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.
யானையால் தொடங்கிய நட்பு
பரத்தும் தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்துள்ளார். "குழந்தை நட்சத்திரமாக நான் நடித்த முதல் படம் நைனா. அந்த படத்தில் ஜெயராம் சாருடன் நடித்தேன். ஒரு காட்சிக்காக ஜெயராம் சார் தன்னுடைய யானையை கொண்டு வருகிறார் என்று சொன்னார்கள். அப்போது 'ஒருத்தர் யானையை வளர்ப்பாங்களா?' என்று ஆச்சரியப்பட்டேன்." என்று அவர் சிரித்தபடி கூறியுள்ளார்.
அதன்பிறகு "பஞ்சதந்திரம்" படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசியின் மகனாக நடித்த அனுபவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.
யார் இந்த பரத்?
பலருக்கும் பரத் என்ற பெயர் உடனே நினைவுக்கு வராமல் இருக்கலாம். ஆனால் அவரது முகம் நிச்சயம் நினைவுக்கு வரும். 2002-ஆம் ஆண்டு ஜெயராம் நடித்த "நைனா" திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு, பஞ்சதந்திரம், போக்கிரி, வியாபாரி, சிலம்பாட்டம், உத்தமபுத்திரன், இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பான "மை டியர் பூதம்" சீரியலும் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.
60-க்கும் மேற்பட்ட படங்கள்
குழந்தை நட்சத்திரமாக மட்டும் அல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சேர்த்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் பரத். தெலுங்கில் வெளியான "Ready" மற்றும் "Pindaas" திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.
சினிமாவை விட்டு விலகவில்லை
தமிழில் சமீப காலமாக அதிகமாக பார்க்க முடியவில்லை என்றாலும், பரத் சினிமாவை விட்டு விலகவில்லை. கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான "Viswam" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைக்குப் பின்னாலும் தொடர்ந்து தனது பயணத்தை அமைதியாக நகர்த்தி வருகிறார்.
பரத் வேண்டுகோள்
வீடியோவில் பேசிய பரத், "ஜெயராம் சார் இன்னும் நிறைய படங்களில் ஹீரோவாக நடிக்க வேண்டும். சினிமாவுக்கு அவர் தேவை. மக்களுக்கு அவர் தரும் நகைச்சுவையும் தேவை." என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் ஜெயராமை நெகிழ்ச்சியடைய வைத்ததோடு, அங்கிருந்தவர்களின் கைதட்டலையும் பெற்றது.
ரசிகர்களை நெகிழ வைத்த தருணம்
ஒரு காலத்தில் திரையில் அப்பா - மகனாக நடித்த இருவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருவரை ஒருவர் நினைவுகூர்ந்த அந்த தருணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "பஞ்சதந்திரம்" படத்தில் குட்டி பையனாக ஓடிய பரத், இன்று பெரிய இளைஞனாக மாறியிருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும்,
"காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!" என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications