சிம்ப்ளி நாகேந்திர பாபு! "சகாயன்" சிரஞ்சீவி! அவுட்ஸ்டாண்டிங் விஷ்ணு மஞ்சு! தமிழ் நடிகைக்கு உதவிய "மா"
சென்னை: ஒரு சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வரும் நடிகை வாசுகிக்கு தெலுங்கு திரையுலகில் இருந்து உதவிய மெகா ஸ்டார் குடும்பத்தினர்! கண்கலங்கி நன்றி தெரிவித்தார் காமெடி நடிகை!
1990 களில் காமெடி நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் போன்று கலக்கியவர் நடிகை வாசுகி. இவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் ரிக்ஷா மாமா படத்தில் செய்த காமெடியை இன்று வரை அனைவரும் ரசிப்பார்கள்.

அந்த படத்தில் அவர் பேங்க் ஆபிஸர் என கூறி எந்த ரிக்ஷாவில் ஏறுவது என யோசிப்பார். அப்போது கவுண்டமணி தனது ரிக்ஷாவில்தான் ஃபேன் வசதி உள்பட டீலக்ஸ் ரிக்ஷா என கூறி வாசுகியை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்வார்.
கூலிங்கிளாஸ், குடை, ஹேண்ட் பேக் என ஹேண்ட்சம்மாக இருந்த வாசுகியை பார்த்த கவுண்டமணி அவரை வங்கி வாசலில் இறக்கிவிடுவார். இதனால் அவர் வங்கி அதிகாரி என நினைத்து இறுதியில் அவர் பிச்சைக்காரி என்று தெரியவரும். இதனிடையே கவுண்டமணிக்கு பிச்சைக்காரிதான் கிடைப்பார் என கிளி ஜோசியம் சொல்லும் பாண்டு கூற அதற்கு கவுண்டமணி பிச்சைக்காரின்னா சொன்னே எனக்கு பேங்க்காரி கிடைச்சிருக்கா என்பார்.
இப்படி அனைவரையும் சிரிக்க வைத்த வாசுகிக்கு பட வாய்ப்புகள் வராததால் அதிமுகவில் இணைந்தார். அங்கு அவர் 22 ஆண்டுகாலம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார். இவர் தற்போது சாப்பாட்டுக்கே வழியில்லை என நெஞ்சை உருக்கும் ஒரு பேட்டியை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி அளிக்கையில் நான் 22 ஆண்டுகள் அதிமுகவில் இருந்தேன்.
நான் சினிமாவில் சம்பாதித்த சொத்தை எல்லாம் கஷ்டத்திற்காக விற்று விட்டேன். என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மண்ணை விட்டு மறைந்தாரோ அன்று முதலே எனக்கு கஷ்டம்தான். நான் அணிந்திருந்த நகைகள், ஏசி, பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டரை கூட விற்றுவிட்டேன். தற்போது அனாதையாக கஷ்டப்பட்டு வருகிறேன்.
எனது நிலையை அறிந்து தெலுங்கு டிவி சேனலில் என்னை பேட்டி எடுத்தார்கள். அந்த பேட்டியை பார்த்த சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபு, சேனல் மூலம் என்னை தொடர்பு கொண்டு வீடியோ காலில் பேசினர். அப்போது நாகேந்திர பாபு, "நாங்கள் இருக்கும் போது கவலைப்படாதீர்கள். நீங்கள் ஆந்திராவுக்கு வந்துவிடுங்களேன்" என அழைத்தார்.
பிறகு எனது அக்கவுன்ட்டில் 1 லட்ச ரூபாய் போட்டார். அத்துடன் தெலுங்கு சேனலும் நான் கஷ்டத்தில் இருப்பதை ஒளிபரப்பியதோடு எனது கூகுள் பே , ஜி பே எண்ணையும் வெளியிட்டனர். இதனால் தெலுங்கு பேசும் மக்கள் எனக்கு பணம் அனுப்பினர். அது ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை கிடைத்தது.
அத்துடன் சிரஞ்சீவியும் எனது நிலையை அறிந்து எனக்கு ரூ 1 லட்சத்தை எனது அக்கவுண்ட்டில் போட்டார். அது போல் எனது குருநாதர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, என்னை தொடர்பு கொண்டு எனக்கு ஆந்திரா சினிமா துறை சங்கத்தில் ரூ 1 லட்சம் கொடுத்து ஆயுட்கால உறுப்பினராக சேர்த்துவிட்டார்.
அதில் கூட பென்ஷன் கிடைக்கும். ஆனால் நான் சேர்ந்து 5 ஆண்டுகள் ஆகியிருந்தால் மட்டுமே பென்ஷன் கிடைக்கும். அந்த பாக்கியமும் எனக்கு இல்லாமல் போய்விட்டது. என்னிடம் இருக்கும் 3 லட்சம் பணத்தை வைத்துக் கொண்டு நான் எத்தனை நாட்களுக்கு சாப்பிட முடியும்?
ஆந்திராவில் இருக்கும் சினிமா சங்கத்தினர் உதவி செய்கிறார்கள். ஆனால் தமிழ் நடிகர் சங்கம் எனக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. இனியாவது என் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது உதவிகளை செய்ய வேண்டும் என நடிகை வாசுகி இருகரங்களை கூப்பி கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications