முண்டாசுப்பட்டி முதல் சரவணன் மீனாட்சி சீரியல் வரை.. மறைந்த நடிகர் மதுரை ‘மீசை’ மோகன் பற்றிய ரகசியம்
சென்னை: நடிகர் மதுரை மீசை மோகன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய இறப்பிற்கு பல பிரபலங்கள் தொடர்ச்சியாக வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மீசை மோகன் எப்படி சினிமாவிற்குள் வந்தார் என்பது போன்ற பல சுவாரசியமான அவரைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வலம் வருகிறது.
அதோடு மதுரையில் அரசு வேலை பார்த்து வந்த மீசை மோகன் அந்த வேலையை விட்டுவிட்டு தான் நடிக்க தொடங்கி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டு காலமாக பயணம் செய்த மதுரை மோகனின் அடையாளமே அவருடைய மீசை தான் என்று சொல்லலாம். கம்பீரமான மீசையோடு ஒவ்வொரு திரைப்படங்களிலும், சீரியல்களிலும் மதுரை மோகன் நடித்திருக்கிறார். இந்த மீசையாலையே இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று பல பேட்டிகளிலும் மதுரை மோகன் தெரிவித்திருக்கிறார். அதோடு இவர் மதுரையில் அரசு வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது இடையில் கிடைக்கும் நேரங்களில் சென்னையில் இருந்து படப்பிடிப்புக்காக மதுரை, தேனி போன்ற பல மாவட்டங்களுக்கு சென்று சினிமாக்காரர்களுக்கு லொகேஷன் பார்த்து தருவது அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்து இருக்கிறார். அப்போதுதான் தயாரிப்பாளர் சங்கிலி முருகனின் நட்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. அதன் மூலமாகத்தான் மதுரை மோகனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக மதுரை மோகன் கும்பக்கரை தங்கையா, கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள், முண்டாசுப்பட்டி, சீமா ராஜா போன்ற பல படங்களில் குணச்சித்திரக்க வேடங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் வீரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி உட்பட பல சீரியல்களை இயக்கிய இயக்குனர் அழகர் மூலமாக இவருக்கு சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒரு நாள் அழகர் திடீரென்று மீசை மோகனை அழைத்திருக்கிறார். அப்போது மீசை மோகன் மீசைக்கு டை கூட அடிக்காமல் அப்படியே போய்விட்டாராம். அதை பார்த்ததும் இங்கே டை அடிச்சுட்டு ஆயிரம் பேர் இருக்காங்க. ஆனா நம்ம கேரக்டருக்கு இப்படியே இருக்கட்டும்னு அவரை செலக்ட் செய்து இருக்கிறார். அதற்குப் பிறகு மதுரை சரவணன் மீனாட்சி, ரோஜா, என் பெயர் மீனாட்சி என பல சீரியல்களில் மீசை மோகன் நடித்திருக்கிறார்.
அதோடு ஈரமான ரோஜாவே சீரியலில் முதல் பாகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில் இவர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதால் அந்த சீரியலில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. அதுபோல நடிக்க தொடங்கியதும் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்ததால் சென்னையிலேயே வடபழனியில் வீடு எடுத்து தங்கி இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் இன்று அதிகாலை மரணம் அடைந்திருக்கிறார். இந்த தகவல்கள் வெளியே தெரிய ஆரம்பித்ததும் சின்னத்திரை சினிமா நடிகர் நடிகைகள் ரசிகர்கள் என பலதரப்பட்டரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications