"ஏய் இந்தாம்மா".. வசனம் உருவானது எப்படி?.. யார் சொல்லிக் கொடுத்தது?.. நடிகர் மாரிமுத்து ஓபன் டாக்
சென்னை: ஏய் இந்தாம்மா என்ற வசனம் உருவானது எப்படி என்பது குறித்து நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து விவரித்துள்ளார்.
சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் மக்களின் ஏகோபித்த ஆதரவை அடுத்து தினசரி 7 நாட்களும் ஒளிபரப்பப்படுகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் மாரிமுத்து, மக்கள் மனதில் பதிந்துவிட்டார்.

கோபத்தில் அவர் பேசும் டயலாக்குகள் சிரிப்பை வரவழைக்கும். அவருடைய உடல் மொழியே மொத்த டயலாக்கையும் பேசும். அந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்திருப்பார். இவர் இயக்குநரும் கூட. பூவே உனக்காக, ஆசை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.
இவர் இந்த சீரியலில் பேசும் ஏய் இந்தாம்மா எனும் டயலாக மிகவும் பிரபலம். பெண்ணடிமைத்தனம் செய்யும் இவரது இந்த கேரக்டரை பார்த்தாலே எந்த பெண்ணும் இது போல் ஒரு கணவர் வரக் கூடாது என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு வில்லன்களிலேயே கொடூரமான வில்லனாக விளங்குகிறார் ஆதி குணசேகரன்.
இப்படிப்பட்ட ஆதி குணசேகரன் தான் நிஜவாழ்க்கையில் எப்படி என்பது குறித்து சன் டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், திருச்செல்வம் சார் எனக்கு இந்த சீரியலில் நிறைய சுதந்திரத்தை கொடுத்துள்ளார். டயலாக்குகளை அவர் பக்காவாக எழுதி கொண்டு வருவார். அவர் நவீன பாக்கியராஜ் என சொல்லலாம்.
அப்படி அவர் எழுதி வரும் டயலாக்கை தாண்டி நடிக்கும் போதும் சில விஷயங்களை சொல்லுவார். அவர் சொல்வதல்லாமல் நானும் சில வார்த்தைகளை சேர்த்து கொள்வேன். அது ஹிட்டாகிவிடுகிறது. நான் தேனி மாவட்டத்துக்காரன். அங்குள்ள சிறிய கிராமம், எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி கூட இல்லை. இந்த ஊரை சேர்ந்தவர் என்பதால் மதுரை பாஷை எனக்கு எளிதாக உள்ளது.
வெள்ளை மண்ட கிழவி என என் அப்பத்தாவை நான் திட்டுவதும் பிரபலமடைந்துவிட்டது. அதாவது எங்கள் ஊரில் அப்பனை பெத்த அப்பத்தாவை அவருடைய பேரன் கிழவி என்றும் வாடி போடி என்றும் அழைப்பான். அதுதான் வாழ்வியல். இதில் மரியாதை குறைச்சல் என்றெல்லாம் இல்லை. என் சொத்தை ஒருத்தன் பிடுங்கிக் கொண்டு என்னை நடுத்தெருவில் நிற்க வைக்க பார்க்கிறான், அவனுடன் இந்த அப்பத்தா நட்பு பாராட்டும் போது நான் எப்படி வேடிக்கை பார்ப்பேன். என் கோபத்தைதான் அப்படி கொப்பளிக்கிறேன்.

என் உடல் மொழி குறித்து கேட்கிறீர்கள். அதாவது என் எதிரில் நிற்போர் என்ன டயலாக்கு பேசுவார் என்பதையும் இயக்குநர் என்னிடம் சொல்லிவிடுவார். இதை கேட்பேன். நான் அமைதியாக நிற்பதை விட என் காதை நீவுவேன், உதட்டை கடிப்பேன், நமட்டை மடிப்பேன் இப்படியெல்லாம் செய்வேன்.
அது போல் ஏய் இந்தாம்மா எனும் டயலாக் எப்படி வந்தது என்றால், எதிர்நீச்சல் சூட்டிங் ஆரம்பித்த 7 ஆவது நாள் அல்லது 8 ஆவது நாள் இருக்கும். அப்போது நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஹரிப்ரியா சமையல் அறையில் இருப்பார். அப்போது நான் ஏம்மா காப்பி எடுத்துட்டு வா என சொல்ல வேண்டும். இதுதான் டயலாக், ஆனால் நானோ ஏய் இந்தாம்மா காபி போட்டுக் கிட்டு வா என்றேன்.
அதுதான் பிரபலமடைந்துவிட்டது. இந்த டயலாக் என் அப்பா பயன்படுத்துவார், அவர் ஒரு விவசாயி, இன்றும் விவசாய வேலைகள் அனைத்தும் எனக்கு அத்துபடி. அவர் விவசாயம் செய்யும் போது பெண்களை வேலை வாங்கும் போது ஏய் இந்தாம்மா இங்க வந்து நாத்து நடு என சொல்வார். அது அப்படியே எனக்கு வந்துவிட்டது. எந்த டயலாக்கையும் பிளான் செய்து பேசுவதில்லை, அதுவாக வந்துவிட்டது. இவ்வாறு மாரிமுத்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications