யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்காதீர்கள்! யாரை சொல்கிறார் நெப்போலியன்?
டோக்கியோ: உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள் என நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் நெப்போலியன்- ஜெயசுதா தம்பதியின் மகன் தனுஷுக்கு நவம்பரில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக ஜப்பானிற்கு கப்பல் மூலம் பயணம் செய்துள்ளனர். அமைச்சர் கே.என்.நேரு, நெப்போலியனின் மாமா. நெப்போலியன் சினிமாவிலும் அரசியலிலும் நன்றாகவே ஜொலித்தார்.

ஆனால் தனது மகனின் விருப்பத்திற்காக அவர் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அவருடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரால் விமானத்தில் இந்தியாவிற்கு வர முடியாது என்பதால் அவர் கப்பலில் பயணம் செய்து ஜப்பானுக்கு சென்றுள்ளார்.
இவர்களுடைய பயணம் குறித்தும் தனது மகனின் ஆசைகள் குறித்தும் நடிகர் நெப்போலியன் பல்வேறு பதிவுகளையும் வீடியோக்களையும் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்றைய தினமும் அவர் ஒரு போஸ்ட்டை போட்டிருக்கிறார்.
அந்த பதிவில், அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்களே, எங்கள் மூத்த மகன் தனுஷின் 8 ஆண்டுகால கனவு ..! இந்தியாவில் பிறந்தாலும் , சூழ்நிலை காரணமாக உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள், மறு கோடியில் இருக்கும் ஜப்பானுக்கு பயணம் செய்ய ஓர் ஆண்டு திட்டமிட்டு , 6 மாத காலமாக செயல்வடிவம் கொடுத்து, ஒரு மாதகாலமாக பயணம் செய்து, உங்கள் அனைவரது வாழ்த்துக்களாலும் ஆசீர்வாதத்தாலும், தனுஷின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்...!
எல்லையில்லா மகிழ்ச்சி அவனுக்கு...!அளவில்லா மனநிறைவு எங்களுக்கு..! சாதித்துவிட்டான். இந்த தருணத்தில் ஒருசில விசயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..! அதுபோல எங்கள் வாழ்க்கையை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்..!
நம் பெற்றோரின் கனவுகளுக்காகவும், நமது கனவுகளுக்காகவும், நம் பிள்ளைகளின் கனவுகளுக்காகவும் அவசியம் வாழ வேண்டும்..!
வாழ்ந்து பார்க்க வேண்டும்..! கடமையை நிறைவேற்ற வேண்டும்..! வாழ்க்கை ஒருமுறைதான்..! வாழ்ந்துதான் பார்போமே..!
"அரிது அரிது மானிடராய்ப்
பிறப்பது அரிது..! "
இந்த உலகிற்கு நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை..! அதுபோல் நாம் இந்த உலகைவிட்டு போகும் போதும் எதையும் கொண்டு போகப்போவதில்லை..!
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
"தீதும் நன்றும் பிறர்தர வாரா"
"அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்" அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்..!
அவரவர் வாழ்க்கையை அவர்களது மனம்போல் நன்றாக வாழுங்கள்..!
மற்றவரையும் அவர்களது மனம்போல வாழ விடுங்கள்..! யார் மனதையும் புண் படுத்தாதீர்கள்.
குறை கூறாதீர்கள், பழிக்காதீர்கள், உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் , யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்..! உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்..!
"ஒரு பக்க சொல் ஓர் யானை பலம்"
எல்லோரையும் வாழ்த்துக்கள்..!
பிடிக்கவில்லை என்றால் இழிவாக பேசாதீர்கள்..! அது உங்களுக்கே ஒருநாள் திரும்பிவிடும்..!
எண்ணம் போல்தான் வாழ்க்கை..!
நன்றாக எண்ணுங்கள்..!
சிந்தனையை செயல்படுத்துங்கள்..!
உலகை நீங்களும் வெல்லலாம்..!
முயன்றால் முடியாதது என்று
எதுவுமே இல்லை..!
வாழுங்கள் ...! வாழவிடுங்கள்..!
நான் போடுகின்ற ஒவ்வொரு பதிவும்,
எனது திரையுலகின் நடிப்பையும்
நிஜ உலகின் வாழ்க்கையையும்
பார்த்து ரசிப்பவர்களுக்கும்,
எங்களை நேசிப்பவர்களுக்கும், எங்களிடம் அன்பை சுவாசிப்பவர்களுக்கு மட்டும்தான்..! அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் பல..! இவ்வாறு நெப்போலியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications