கமலோடு அந்த படத்தில் நடிக்க முடியாதுன்னு சொன்னேன்! அவர் போனில் கேட்ட வார்த்தை.. நெப்போலியன் ஓபன்
சென்னை: நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் போது நடந்த பல சம்பவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் நடிகர் கமல்ஹாசன் நடித்த மருதநாயகம் திரைப்படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தான் வேண்டாம் என்றும் எதனால் சொன்னேன்? அதற்குப் பிறகு கமல் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நடிகர் நெப்போலியன் "புது நெல்லு புது நாத்து" என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அந்த காலகட்டத்தில் அதிகமாக திரைப்படங்களில் வில்லனாகவே நடித்து வந்தார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி இருந்தார். அதிலும் அவர் நடிப்பில் வெளியான எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற திரைப்படங்கள் இப்போ வரைக்கும் அவருக்கு பெயர் வங்கி கொடுத்திருக்கிறது.

தற்போது சினிமாவை விட்டு விலகி தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
அதில் நெப்போலியனுக்கு பெயர் வாங்கி கொடுத்த சீவலப்பேரி பாண்டி திரைப்படம் அந்த காலத்திற்கு மட்டுமல்ல இந்த காலத்திலும் ஜாதி வெறியில் இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லும் படமாக தான் இருக்கும்.
இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் கமல்ஹாசன் தான் நடிக்க இருந்தாராம். கமல்ஹாசனிடம் இந்த படத்திற்கான வாய்ப்பு வந்தபோது கமல் வேறு திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லையாம். இது பற்றி கமலே ஒருமுறை நெப்போலியனிடம் சொன்னாராம். அதில் நெப்போலியன் பேசுகையில் ஆரம்பத்தில் கமல் சாரை எங்கேயாவது பார்க்க நேர்ந்தால் அவருக்கு நான் வணக்கம் சொன்னால் அவர் என்னை பெரிதாக கண்டு கொள்ளவே மாட்டார்.
பார்க்காதது போல போய்விடுவார். அல்லது பார்த்தாலும் வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு போய்விடுவார். எதுவுமே பேச மாட்டார்.இது எனக்கு வருத்தமாக இருந்து கொண்டிருந்தது. ஒரு நாள் என்னிடம் கமல்ஹாசன் நேரடியாகவே பேசினார். அப்போது நீங்கள் நடிச்ச சீவலப்பேரி பாண்டி படத்தை பார்த்தேன். அந்த படத்தில் நீங்க அருமையாக நடிச்சிருக்கீங்க. அந்த படத்தோட வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது. ஆனால் நான் நடித்திருந்தால் கூட இப்படி ஒரு கம்பீரமாக நடித்திருக்க முடியுமான்னு தெரியல.
நீங்க அழகா நடிச்சு இருக்கீங்க என்று சொன்னார். எனக்கு அதற்கு பிறகு தான் புரிந்தது ஓ அவர் மனதை நாம தொட்டு இருக்கோம். அதனால் நம்மை கண்டுகொள்ளாமல் போனவர் இப்போ பேசுகிறார் என்று எனக்கு புரிந்தது. பிறகு அப்போதே நான் அவரிடம் ஏதாவது படத்தில் ஒன்றாக நடிக்கணும் என்று சொன்னேன். அவர் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு போனார். ஆனால் ஒரு மூன்று வருடம் கழித்து எனக்கு போன் செய்து படம் பற்றி பேசணும் வாங்க என்று சொன்னார்.
நானும் போயிருந்தேன் அப்போது படத்திற்கான கதையை சொல்லி முடித்தார். எனக்கு அந்த கதை ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் கடைசியில் அந்த படத்தில் நான் வில்லன் என்று சொன்னார். எனக்கு தூக்கிவாரி போட்டது. காரணம் அந்த நேரத்தில் தான் நான் ஐந்து படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தேன். என்னை நம்பி சில தயாரிப்பாளர்கள் பணத்தை போட்டு இருக்கிறார்கள்.
நான் இந்த நேரத்தில் கமல்ஹாசன் சொன்ன அந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதனால் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை வந்து விடக்கூடாது என்று யோசித்து சார் இந்த படத்தின் கதை நல்லா இருக்கு ஆனால் என்னால் இந்த படத்தில் இப்போதைக்கு நடிக்க முடியாது என்று சொன்னேன். அந்த படம் மருதநாயகம் திரைப்படம் தான். கமல்ஹாசன் சில சமாதானம் சொன்னார்.
ஆனால் நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் சரி என்று சொல்லிவிட்டார். பிறகு அடுத்த வாரம் கலைஞர் தலைமையில் அந்த படத்திற்கான பூஜை எல்லாம் நடந்தது. அப்போது நான் அய்யோ தெரியாமல் வாய்விட்டு விட்டோமோ அப்படி பேசியிருக்க கூடாதோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் சரி நாம எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு பிறகு பல வருடம் ஆகிவிட்டது.
ஆனால் கமலோடு நடிக்க எனக்கு வாய்ப்பே வரவில்லை. அந்த நேரத்தில் எல்லாம் நான் அன்னைக்கு சொன்னது தப்பு என்று நினைத்துக் கொள்வேன். அப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு கமல் சார் போன் பண்ணி படத்திற்கான கதை சொல்லணும் வாங்க என்று சொன்னார் அதோடு இந்த படத்தில் வில்லன் கிடையாது முக்கியமான கேரக்டர் தான் என்று சொன்னார்.
நான் உடனே சரி என்று சொல்லிவிட்டேன். கதை கேட்க வாங்க என்று சொன்னார். நான் வரலை சார், நீங்கள் வில்லன் இல்லை என்று சொன்னதே போதும். எந்த கேரக்டர் என்றாலும் நான் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டேன். அப்படி கதையே கேட்காமல் நான் நடித்ததுதான் விருமாண்டி திரைப்படம். அந்த திரைப்படம் எனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.
அதற்கு பிறகு தசாவதாரம் திரைப்படத்திலும் கமலுடன் நடித்திருக்கிறேன் அந்த திரைப்படத்திற்காக கமல்ஹாசன் போன் செய்தார். அப்போ சில காட்சிகள் தான் இருக்கு என்று சொன்னார். நான் சார் சில காட்சிகள் என்றால் ரொம்ப முக்கியம் இருக்கிறது மாதிரி தெரியலையே வேற ஏதாவது கேரக்டர் கிடைக்குமா? என்று கேட்டேன்.
அதற்கு அவர் நான் தான் இந்த திரைப்படத்தில் 10 கேரக்டர் பண்ணுறேன். எனக்கு அடுத்ததாக நீங்கதான் இருப்பீங்க. உங்களுக்கு நல்ல ஒரு பிரபலம் கொடுத்துவிட்டு இப்போ எவ்வளவு வெயிட் இருக்கிறீங்க என்று கேட்டார் நான் 90 கிலோ இருக்கிறேன் என்று சொன்னேன்.
அப்போ இன்னும் ஒரு பத்து கிலோ வெயிட் கூட்டிருங்க அப்போதான் இந்த திரைப்படத்திற்கு சரியாக இருக்கும் என்றார். அதுபோலவே நான் செய்தேன் தசாவதாரம் திரைப்படமும் எனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. ரஜினிகாந்துடன் எஜமான் திரைப்படத்தில் வில்லனாக நடித்தது ஒரு பக்கம் எனக்கு பிரபலம் கொடுத்திருந்தாலும் நான் இப்படித்தான் நிஜ கேரக்டரில் இருப்பேன் என்று சிலர் நினைத்து விட்டார்கள் ஆனால் கமல்ஹாசன் உடன் நான் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் ஆனாலும் கமல்ஹாசன் எனக்கு இரண்டு படங்களில் வாய்ப்பு தந்தார் என்று அந்த பேட்டியில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications