Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உச்சனை உச்சம் பார்த்தால் பிச்சை எடுப்பாய்!" - டி.ராஜேந்தரின் தீர்க்கதரிசனம்; சரவணனின் மறுபிறப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் 'சேலம் சரவணன்' என்று கொண்டாடப்பட்ட நடிகர் சரவணன், தனது ஆரம்பகால திரை வாழ்க்கை, வீழ்ச்சி, பின்னர் கிடைத்த மறுபிறப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையாளரான டி.ராஜேந்தர், தான் பிச்சை எடுப்பேன் என்று கணித்ததாகவும், அது அப்படியே பலித்ததாகவும் அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் திரையுலக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

90களின் துவக்கத்திலேயே சினிமாவில் நுழைந்த சரவணன், பார்ப்பதற்கு கேப்டன் விஜயகாந்தை ஒத்த தோற்றம் கொண்டிருந்தாலும், தீவிர ரஜினிகாந்த் ரசிகர். சேலத்தில் உள்ள சூரமங்கலம் ரஜினி ரசிகர் மன்றத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே தன்னை இணைத்துக் கொண்டவர், பின்னர் அதன் முக்கிய பொறுப்புக்கும், தலைவராகவும் உயர்ந்தார். ரஜினி படம் வெளியாகும் நாட்களில், தியேட்டர்களில் இவரது அலப்பறைகள் தனியாம்! ரஜினிக்காக அடிதடியிலும் ஈடுபட்டுள்ளாராம். தனது கனவு நாயகனுடன் 'ஜெயிலர்' படத்தில் இணைந்து நடித்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என நண்பர்களிடம் பேசியிருக்கிறார்.

Saravanan T Rajendar

ரசிகர் மன்றத் தலைவர் முதல் ஹீரோ வரை

'பொண்டாட்டி ராஜ்யம்', 'அபிராமி', 'சூரியன் சந்திரன்' போன்ற படங்களில் கிடைத்த வெற்றி, சரவணனை முன்னணி நாயகனாக உயர்த்தியது. ரசிகர்கள் அன்புடன் இவரை 'சேலம் சரவணன்' என அழைத்தனர். தொடர்ச்சியாகப் பட வாய்ப்புகள் குவிந்ததால், பணம் என்ற ஆசையில் கிடைத்த அனைத்துப் பட வாய்ப்புகளிலும் நடித்தார். இதுவே அவருக்குப் பெரும் சறுக்கலை ஏற்படுத்தியது. வரிசையான தோல்விகளால் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகளே இல்லாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

டி.ராஜேந்தரின் தீர்க்கதரிசனம்

இந்த காலகட்டத்தில்தான், ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை சரவணனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகம் ஒன்றில் பேசிய சரவணன், "நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் டி.ராஜேந்தர் என்னை பார்த்து, 'உச்சனை உச்சம் பார்த்தால் பிச்சை எடுப்பாய். நீ பிச்சை எடுக்க போறடா' என்று சொன்னார். அப்போது எனக்கு கையில் 13 படங்கள் இருந்தன. 'என்ன இப்படி சொல்றீங்க... எனக்கு கையில் 13 படங்கள் இருக்கு' என சொன்னேன். அதற்கு டி.ஆர். 'எல்லா படமும் இருக்கும். ஆனால் ஒருத்தன் கூட வரமாட்டான்' என சொன்னார். அப்போது அவர் சொந்தமாகத் தயாரித்த 'பெற்றெடுத்த பிள்ளை' படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன்.

பலித்த ஜோதிடம்

அவர் சொன்னது போலவே, அடுத்த மூன்று வருடங்களில், அதாவது என் 29வது வயதில் எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்துவிட்டேன். பின்னர் '40 வயதில் நீ நல்லா இருப்பாய்' என்றும் அவர் சொன்னார். அவர் சொன்னது போலவே 40வது வயதில் எனக்கு 'பருத்திவீரன்' வெளியானது" என்று தனது சோகமான காலகட்டத்தையும், டி.ராஜேந்தரின் தீர்க்கதரிசனத்தையும் பகிர்ந்துகொண்டார்.

டி ராஜேந்தரின் இன்னொரு முகம்

டி.ராஜேந்தர் ஒரு சிறந்த ஜோதிட வல்லுநர் என்பது வெகு சிலருக்கே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணனின் இந்த பேட்டி, திரையுலகில் ஒரு நடிகரின் ஏற்ற இறக்கங்கள், மற்றும் சினிமா உலகின் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்தும், நடுரோட்டில் நிர்வாணமாக நின்ற சூழல் குறித்தும் கூட முன்னர் சில பேட்டிகளில் வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

சித்தப்பு சரவணன் ஒரு ஃபீனிக்ஸ் பறவை

சினிமா வாய்ப்புகளின்றி தவித்த சரவணனுக்கு, இயக்குநர் பாலாவின் 'நந்தா' திரைப்படம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இது அவருக்கு ஒரு 'செகண்ட் இன்னிங்ஸை' துவக்கி வைத்தது. அதன்பின், இயக்குநர் அமீரின் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' படத்தில் 'சித்தப்பு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை முழுவதுமாக கவர்ந்தார்.

கிடைத்த விருது

'பருத்திவீரன்' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது (Filmfare Award for Best Supporting Actor - Tamil) மற்றும் விஜய் விருதுக்கும் (Vijay Award for Best Supporting Actor) அவர் பரிந்துரைக்கப்பட்டார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு சில படங்களில் மீண்டும் கதாநாயகனாக நடித்தாலும், அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

திருப்பம் தந்த திரைப்படங்கள்

இருப்பினும், கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். 'அரண்மனை', 'கடைக்குட்டி சிங்கம்', 'கோலமாவு கோகிலா', சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த 'ஜெயிலர்', மற்றும் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள தனுஷின் 'ராயன்' போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பெரும் பாராட்டைப் பெற்றன. இந்த படங்கள் சரவணனின் திறமையை மீண்டும் நிரூபித்ததுடன், அவரை தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராகவும் மாற்றியுள்ளன. சரவணன் தற்போது 'சட்டமும் நீதியும்' போன்ற புதிய இணையத் தொடர்கள் மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு ரஜினி ரசிகனாக களமிறங்கி, முன்னணி நாயகனாக உயர்ந்து, வீழ்ச்சியைச் சந்தித்து, டி.ராஜேந்தரின் தீர்க்கதரிசனப்படி மீண்டும் எழுந்து நிற்கும் சரவணனின் கதை, உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் எந்த நிலையிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+