80ஸ் நட்சத்திரங்கள் மீண்டும் சந்திப்பு - பானுப்ரியா வராத காரணம்! அவருக்கு நடந்த துயரம்! பிரபல நடிகர் ஓபன்
சென்னை: ஒவ்வொரு ஆண்டும், 80களின் காலத்தில் இந்திய சினிமாவை கலக்கிய நட்சத்திரங்கள் ஒன்றாகச் சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வது வழக்கம். ஆனால், பல முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், அந்தக் காலத்தின் முன்னணி நடிகை பானுப்ரியா கலந்து கொள்வதில்லை. அதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி நடிகர் பானுசந்தர் அளித்த பேட்டி, ரசிகர்களிடையே ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த பானுப்ரியா
பானுப்ரியா, 80கள் மற்றும் 90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்தவர். தனது கண்களாலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் தனித்துவமான நடிப்புக்கு பெயர் பெற்றவர். அழகன், தர்மத்தின் தலைவன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், பெரும்பாலும் ஹோம்லியான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்தார்.
80ஸ் பிரபலங்களின் சந்திப்பு
80களின் நட்சத்திரங்கள், ஒவ்வொரு வருடமும் ஒன்றாகச் சந்தித்து, தங்களது பழைய நினைவுகளையும், வேடிக்கையான தருணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தச் சந்திப்பில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரத்குமார், ராதிகா, ராதா, நதியா, குஷ்பு, பிரபு போன்ற பல முன்னணி நடிகர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்தச் சந்திப்பு, கலைத்துறை நண்பர்களுக்குள் உள்ள ஆழமான நட்பையும், பரஸ்பர ஆதரவையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இப்போ உள்ள சில நடிகைகள் தங்களுடைய சக நடிகைகளுடன் போட்டி போட்டு மாறி மாறி குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள நடிகைகள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
பானுப்ரியா பங்கேற்காததற்கான காரணம்
80களின் நட்சத்திரக் கூட்டத்தில் பானுப்ரியா கலந்து கொள்ளாதது குறித்து, மூத்த நடிகர் பானுசந்தர் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசினார். "ஆரம்பத்தில் பானுப்ரியா இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால், அதன் பிறகு அவர் வரவேயில்லை" என்று கூறினார். அவர், "பானுப்ரியாவின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவரால் இந்தக் கூட்டத்திற்கு வர முடியவில்லை. அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்தார்" என்றும் தெரிவித்தார்.
பானுப்ரியா 1998ஆம் ஆண்டு டிஜிட்டல் கிராபிக்ஸ் பொறியாளர் ஆதர்ஷ் கௌசலை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி, அமெரிக்காவில் வாழ்ந்தார். 2002-ல் அவர்களுக்கு அபிநயா என்ற மகள் பிறந்தார். மகள் வளர்ந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அந்த நேரத்தில் அவரது குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. 2018-ல் அவரது கணவர் கௌசல் காலமானார். இந்தத் துயர நிகழ்வு அவரை மனதளவில் மிகவும் பாதித்தது. "அவரை மிகவும் மிஸ் செய்கிறோம்" என்று பானுசந்தர் உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்புகளில் நடிகர்கள், நடிகைகள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள் என்றும், குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை என்றும் பானுசந்தர் தெளிவுபடுத்தினார். "அன்றைய கதாநாயகன், கதாநாயகிகள் என்பதால், பழைய இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் காதல் கதைகளும் உண்டு. குடும்பத்தினர் வந்தால் சுதந்திரமாகப் பழக முடியாது" என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பானுப்ரியா தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களைச் சமாளித்து, மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications