குண்டு கல்யாணம் கிட்ட மஞ்சுளா சொன்ன ஆச்சரியம்.. படுக்கையிலும் பணம் தந்து உதவிய எம்ஜிஆர்.. அற்புதம்
சென்னை: புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஆசீர்வாதத்தினால்தான், நான் முழுமையாக சினிமாவில் இறங்கினேன். இல்லாவிட்டால், சினிமாவில் நடித்திருக்கவே மாட்டேன் என்று தீவிர அதிமுக பிரமுகரும், மூத்த நடிகருமான குண்டு கல்யாணம் சொல்லியிருக்கிறார்.
NewsG1 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த நடிகர் குண்டு கல்யாணம் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பற்றின நெகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

"என் அப்பாவுக்கு பிறகு, எங்கள் குடும்பத்தை தத்தெடுத்து பாதுகாத்து கொண்டது, புரட்சித்தலைவர்தான்.. அப்போது நான் டிவியில் நடித்து கொண்டிருந்தேன்.. ஆனால், அது எம்ஜிஆருக்கு தெரியாது. பிறகு திடீரென சினிமாவில் வாய்ப்பு வந்தது.. அதை பற்றி எம்ஜிஆரிடம் சொல்ல பயமாக இருந்தது. எனவே, நேரில் சொல்வதற்காக சென்றேன்.
சத்யா ஸ்டுடியோ: அப்போது சத்யா ஸ்டுடியோவில், ஒரு படத்தின் பூஜைக்காக வந்திருந்தார்.. காரில் இருந்து இறங்கியதுமே என்னை பார்த்துவிட்டு, என்னுடைய வலது கையை இழுத்து பிடித்துக்கொண்டு, லாக் செய்துவிட்டார்..
என் கையை பிடித்து கொண்டு நடக்கிறார்.. ஆனால், அவர் வேகத்துக்கு என்னால் நடக்க முடியவில்லை.. நானும் பின்னாடியே ஓடறேன்.. படத்துவக்கத்துக்கு கேமராவை ஆன் செய்தபிறகுதான் என்னுடைய கையை விட்டார்..

விஜயகுமாரி: பிறகு அங்கிருந்தவர்கள் அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள்.. அப்போது அங்கே வந்த நடிகை விஜயகுமாரி, "அண்ணா உங்களுடன் சேர்ந்து நானும் ஒரு போட்டோ எடுத்துக்கணும்" என்று கேட்டார். அதற்கு எம்ஜிஆர், "வாம்மா தங்கச்சி" என்று அழைத்து போட்டோவுக்கு நிற்க வைத்தார். அப்போது என்னை பார்த்து, "டேய், அங்கே என்ன பண்றே? இங்கே வா" என்று கூப்பிட்டு, கழுத்தில் கையை போட்டு, போட்டோ எடுத்தார்.
பிறகு, கிளம்பி செல்வதற்காக காரில் ஏறும்போதுதான், எனக்கு சினிமாவில் வாய்ப்பு வந்ததை பற்றி சொன்னேன்.. உடனே என்னை பார்த்து ஒரு முறை, முறைத்துவிட்டு, சென்றார்.. எனக்கு வயிறெல்லாம் கலங்கிவிட்டது.. என்னால் வீட்டில் தூங்க முடியல..
அதற்கப்புறம், அந்த படத்தின் பிரிவியூ ஷோ பார்த்துட்டு, ஜானகி அம்மா, என் அம்மாவுக்கு போன் செய்து பேசினார்.. "பையன் நல்லா நடிச்சிருக்கான், நல்லா வருவான்" என்று சொன்னபிறகுதான் எனக்கு உசுரே வந்தது. எம்ஜிஆரின் ஆசீர்வாதத்தினால்தான், நான் முழுமையாக சினிமாவில் இறங்கினேன்.

மஞ்சுளா: மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றை நடிகை மஞ்சுளா என்னிடம் சொன்னார்.. மஞ்சுளா உள்ளிட்டோர் சிறப்பு அனுமதியை பெற்று மருத்துவமனையில் சந்திக்க சென்றுள்ளனர். ஆனால், அப்போது எம்ஜிஆருக்கு டிரிப்ஸ் ஏறிட்டு இருந்திருக்கு.. நினைவு எதுவும் இல்லை.. அதனால், இங்கிருந்து சென்றவர்கள், தங்கள் பேரை சத்தமாக சொல்கிறார்கள். உடனே படுக்கைக்கு பக்கத்திலிருந்து, அமெரிக்கா டாலர் பணத்தை அள்ளி தந்தாராம்.
இத்தனைக்கும் வந்திருப்பவர்கள் யார் என்று அவருக்கு தெரியவில்லை.. பெயர் சொல்லியும் நினைவுக்கு வரவில்லை.. சிகிச்சை நடந்து கொண்டிருந்தால் நிதானமும் தெரியவில்லை..
உயிர்ப்பு: ஆனால், அந்த நேரத்திலும் அவருக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெரிந்துள்ளது, அதுதான் தர்மம் செய்வது.. அதனால்தான், இன்றைக்கும் புரட்சித்தலைவர் மக்கள் மனதில் உயிருடன் இருக்கிறார்" என்று பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications