மெஷினில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் வலது கை! மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சாய் காயத்ரியின் கை, மெஷினில் சிக்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலது கையில் அடிபட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் சாய் காயத்ரி. எந்த சீரியலாக இருந்தாலும் தனது கதாபாத்திரம் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்பதையே இவர் விரும்புவார்.

ஒரு வேளை ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கையில் அதில் இயக்குநர் ஏதாவது நெகட்டிவ் ரோலாக மாற்றினால் உடனே அந்த சீரியலை விட்டு இவர் விலகி விடுகிறார். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் மனைவியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த சீரியலில் இருந்து விலகினார். இவர் விஜய் டிவியில் நீ நான் காதல் என்ற சீரியலில் நடித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தனது உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து 2ஆவது கதாநாயகி கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த சாய் காயத்ரி, கடந்த ஆண்டு சாய் சீக்ரெட்ஸ் என்ற அழகு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். இவரிடம் 20- க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.
அந்த பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக இவரது பொருட்களின் ஸ்பெஷாலிட்டி என்ன என்பதை வீடியோவில் கூறி வருவார். தற்போது பல பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இவரது பொருட்களை மக்கள் அதிகம் வாங்குகிறார்கள்.
இயற்கையான முறையல் ஹேர் ஆயில், பேஸ் மாஸ்க், நலங்கு மாவு, சோப்பு உள்ளிட்ட 8 வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக பிரத்யேக இயந்திரங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் மெஷினில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது வலது கை, மெஷினில் சிக்கியது.
இதனால் படுகாயமடைந்த சாய் காயத்ரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது கையில் பெரிய அளவிலான கட்டு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து சாய் காயத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக மெஷினில் கை சிக்கி காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த ஒன்று அல்லது இரு வாரங்களுக்கு முழுமையாக சமூகவலைதள பக்கங்களில் இல்லாமல் அவ்வப்போது வந்து செல்வேன். எல்லாம் திருஷ்டி என தெரிவித்துள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications