“நீயா நானா”க்கு பிறகு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. அவதூறு பரப்புறாங்க! நடந்தது இதுதான்! யாமினி உருக்கம்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் தனது காதல் தோல்வி அனுபவத்தை பகிர்ந்து அனைவரையும் உருக்கத்தில் ஆழ்த்திய யாமினி, தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நிகழ்ச்சிக்கு பிறகு கிடைத்த பிரபலத்தோடு சேர்த்து எதிர்பாராத விமர்சனங்களும், அவதூறு கருத்துகளும் அவரை மனஅழுத்தத்திற்கு தள்ளியுள்ளன.
கடந்த வார எபிசோடில், "காதல் தோல்வியில் தவிக்கும் இளைஞர்கள்" என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், யாமினி தனது 4 வருட காதல் குறித்து கண்ணீர் மல்க பகிர்ந்தார். தன்னுடைய உறவை காப்பாற்றும் முயற்சியில் தான் 'டாக்ஸிக்' ஆக மாறிவிட்டதாக நேர்மையாக ஒப்புக்கொண்ட அவர், தொடர்ந்து காதலரை தொடர்பு கொள்ள முயன்று தொந்தரவு செய்தது அவரையே விலகச் செய்துவிட்டது என தெரிவித்தார்.

கோபிநாத் கொடுத்த அட்வைஸ்
அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் மிகவும் அமைதியாகவும் அதே நேரத்தில் பலருக்கும் தேவையான அட்வைஸ் கொடுத்தார். "வாழ்க்கையை காதலிலேயே சுருக்காதீர்கள்... உலகம் உங்களுக்காக இருக்கிறது.. இந்த பரந்த உலகத்தில் இன்னும் பார்க்க ஏராளமாக இருக்கிறது" என்ற அவரது வார்த்தைகள் பலராலும் பாராட்டப்பட்டு வைரலானது.

நிகழ்ச்சிக்கு பிறகு மாறிய வாழ்க்கை
நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் யாமினிக்கு சமூக வலைதளங்களில் பெரும் கவனம் கிடைத்தது. பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து, "இது காதல் இல்லை... ஒரு எமோஷனல் பாண்டு" என்று ஆலோசனைகளையும் கூறினர்.
ஆனால் அதே நேரத்தில், சிலர் கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கினர். "அந்த பையன் தப்பிச்சு போனது நல்லது", "இது காதல் இல்லை தொந்தரவு" போன்ற கமெண்டுகள் மட்டுமின்றி, யாமினியை தவறாக சித்தரிக்கும் வீடியோக்களும் பரவ ஆரம்பித்தன.

யாமினி வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில் யாமினி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் மிகவும் உருக்கமாக பேசினார். "நான் என்னுடைய உண்மையான அனுபவத்தை தான் பகிர்ந்தேன். அதற்காக என்னை இப்படிப் பேசுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் சில தவறான தகவல்களை பற்றி அவர் விளக்கம் அளித்தார். தன்னுடன் இருக்கும் ஒரு இளைஞரின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, "இவர்தான் காதலன்" என்று தவறாக பரப்பப்படுவதாக கூறிய அவர், "அவர் என் தம்பி மாதிரி... ஒரு சின்ன பையன். அவனுடைய வாழ்க்கையையும் கெடுக்காதீர்கள்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மனஅழுத்தம் அதிகரிப்பு
தொடர்ந்து வரும் அவதூறு காரணமாக, தன்னுடன் நெருங்கிப் பழகவே பலர் தயங்குகிறார்கள் என்றும் யாமினி கூறியுள்ளார். "நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது, என்னைப் போன்றவர்களிடம் இருந்து ஒரு ஆறுதல் கிடைக்கும் என்று தான். ஆதரவு கிடைத்தது உண்மை... ஆனால் இதே நேரத்தில் இந்த விமர்சனங்களும் மனஅழுத்தமும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
யாமினியின் இந்த நிலைமை, சமூக வலைதளங்களின் இரு முகங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. ஒருபுறம் ஆதரவு, புரிதல், எமோஷனல் கனெக்ஷன் இருந்தாலும்... மறுபுறம் கடுமையான விமர்சனம், தவறான தகவல், தனிப்பட்ட தாக்குதல் எல்லோருக்கும் இருக்கிறது என்று காட்டுகிறது.












Click it and Unblock the Notifications