தலையில் முடி உதிர்ந்து வழுக்கை தோற்றத்தில் நடிகர் பிரபாஸ்.. வைரல் ஆகும் போட்டோ.. AI வேலையாம்!
சென்னை: சமூக வலைதளங்களில் நடிகர் பிரபாஸின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. விக் வைக்காத பிரபாஸ் எனக் குறிப்பிட்டு இந்த படம் பரப்பப்பட்டு வருகிறது. இந்தப் படம் AI மூலம் உருவாக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர் பிரபாஸ். பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த பிறகு. பிரபாஸும் உலகளவில் இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார்.

பாகுபலி படத்தைத் தொடர்ந்து சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார், கல்கி 2898 ஏடி என தொடர்ச்சியாக பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் பிரபாஸ் நடிப்பில் கண்ணப்பா திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தற்போது 'தி ராஜா சாப்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். முதல் முறையாக ஹாரர் கதைக்களத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் மாருதி பிரமாண்டமாக இயக்குகிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் பிரபாஸின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில், வழக்கத்திற்கு மாறாக தலையில் முடியில்லாத நிலையில் அவர் காணப்படுகிறார். விக் இல்லாமல் பிரபாஸ் என்ற கேப்ஷன் உடன் இந்தப் புகைப்படம் பரவி வருகிறது.
இந்தப் புகைப்படத்தை பார்த்த பிரபாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்ற நடிகர்களின் ரசிகர்கள், இந்தப் படத்தைப் பகிர்ந்து பிரபாஸை கிண்டல் செய்தனர். இதனால் பிரபாஸ் மற்றும் மற்ற நடிகர்களின் ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் வார்த்தை மோதல் நிலவி வருகிறது.
இதற்கிடையே பிரபாஸின் இந்த படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. பிரபாஸின் PR குழுவும் இந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்று மறுத்துள்ளது. இது பிரபாஸின் புகைப்படம் அல்ல, குழப்பை ஏற்படுத்த வேண்டுமென்றே சிலர் செய்த பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
சமீபத்திய பிரபாஸின் தோற்றங்களுடன் இந்த புகைப்படம் ஒத்துபோகவில்லை என அவரது ரசிகர்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஏஐ மூலம் போலி புகைப்படங்கள் உருவாக்கப்பட்டு, உண்மையான தகவலைப் போன்று பரப்பப்பட்டு வருவது, தொழில்நுட்பப் பாய்ச்சல் ஏற்படுத்தும் ஆபத்து குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications