எம்ஜிஆர் கொடுத்த சாபம்.! 80 வயசானாலும் இன்னும் 16 தான்! இளமை ரகசியத்தை உடைத்த சிவகுமார்
சென்னை: வயசு கூடினாலும் உடலும் மனசும் இளமையாக இருக்க முடியும் என்பதை வாழ்ந்து காட்டி வருபவர் நடிகர் சிவக்குமார். 80 வயதை கடந்த பிறகும் அவர் காட்டும் சுறுசுறுப்பு, மற்றும் புதிய முயற்சிகள் ரசிகர்களை மட்டும் இல்லாமல், இன்றைய தலைமுறையையும் ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கான காரணம் என்ன என்று கேட்டால், அவர் சொல்வது மிகவும் எளிய வாழ்க்கை முறையே.

காலை உணவு
முதலில் அவர் முக்கியமாக சொல்வது உணவு பற்றிதான். தினமும் காலையில் பழைய சாதம், இரண்டு டம்ளர் மோர், அதோடு பப்பாளி மற்றும் கொய்யாப்பழம் சாப்பிடுவதாக அவர் கூறுகிறார். உடலை குளிர்ச்சியாகவும், லேசாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. "அதிகம் சாப்பிட வேண்டாம், சரியானதை சாப்பிடணும்" என்பதே அவரது பழக்கவழக்கம்.
உணவு கட்டுப்பாடு
உணவு மட்டும் இல்லாமல், கட்டுப்பாடான வாழ்க்கையும் அவருடைய இளமையின் ரகசியம். சீக்கிரம் எழுவது, நேரம் பார்த்து சாப்பிடுவது, உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பது என இந்த பழக்கங்கள் அவரிடம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பெரிய ஜிம் பயிற்சி இல்லாமலேயே, எளிமையான வாழ்க்கை தான் அவரை இவ்வளவு ஃபிட்டாக வைத்திருக்கிறது.
இந்த கட்டுப்பாடு அவருடைய குடும்பத்திலும் தெளிவாக தெரிகிறது. மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். சூர்யா தனது படங்களுக்கு ஏற்ப கடுமையாக ஜிம் பயிற்சி செய்து உடல் அமைப்பை பராமரிக்கிறார். கார்த்தியும் தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை வழக்கமாக செய்து வருகிறார். இருவரும் சாப்பாட்டிலும் கட்டுப்பாடு வைத்திருப்பது, அவர்களுக்கு வீட்டிலிருந்தே வந்த பழக்கம் என்பதையும் காட்டுகிறது.

நடிகர் சிவகுமார் வேண்டுகோள்
சிவக்குமார் தனக்கான வாழ்க்கை பற்றி மட்டுமல்ல, சமுதாய விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசுபவர். குறிப்பாக சமீபத்தில் தேர்தல் நடந்த போது, அவர் தன்னுடைய வாக்கை செலுத்தி விட்டு, எனக்கு யாரு ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. ஆனால் குடிமக்களை குடிகார மக்களாக ஆக்காமல் மதுபான பார்களை மூட வேண்டும். அதோடு குடும்பத்தினர் வருமானத்திற்காக அரசியலை பயன்படுத்தக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.
எம்ஜிஆர் கொடுத்த சாபம்
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், பழைய நினைவையும் பகிர்ந்தார். 1979ஆம் ஆண்டு தனது 100வது படத்தின் போது எம்.ஜி.ஆர் அவரை பார்த்து "இந்த சிவக்குமார் வாழும் காலம் முழுவதும் இளமையோடு இருப்பார்" என்று சாபம் கொடுத்ததையும் நினைவு கூர்ந்தார். அதை சிரித்தபடி பகிர்ந்த அவர், "இப்போ எனக்கு 80க்கு மேல் வயசு... பார்த்தா வயசான மாதிரி தெரியுதா?" என்று கேட்டது ரசிகர்களை கவர்ந்தது.
மொத்தத்தில், சிவக்குமார் வாழ்க்கை சொல்லும் விஷயம் ஒன்றுதான்-பெரிய ரகசியம் எதுவும் இல்லை. எளிமையான உணவு, ஒழுங்கான வாழ்க்கை, உடற்பயிற்சி, நல்ல சிந்தனை இவைகளை தொடர்ந்து கடைபிடித்தால் வயது எவ்வளவு ஆனாலும் உடலும் மனமும் இளமையாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications