மீண்டும் வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. இந்த முறை ஆட்டமே வேற மாதிரி இருக்கு.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சென்னை: தமிழ் தொலைக்காட்சி உலகில் சீரியல்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் மூன்று பெரிய சேனல்கள் - Sun TV, Vijay TV, Zee Tamil. இந்த மூன்றுக்கும் இடையே டி.ஆர்.பி. போட்டி நாளுக்கு நாள் கடுமையாகி கொண்டே இருக்கும் நிலையில், ரசிகர்களை மீண்டும் டிவி முன் அமர வைக்க ஒவ்வொரு சேனலும் புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் சன் டிவி தொடர்ந்து மெகா சங்கமம், அதிரடி ட்விஸ்ட், புதிய கதைக்களம் போன்றவற்றை கொண்டு சீரியல் உலகில் முன்னணியை பிடித்து வைத்திருக்கிறது. இதற்கு போட்டியாக விஜய் டிவியும் கடந்த சில மாதங்களாக ஸ்ட்ராட்டஜியை மாற்றி வருகிறது. புதிய சீரியல்கள் மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பழைய ஹிட் சீரியல்களையும் மீண்டும் ஒளிபரப்பும் முடிவை எடுத்துள்ளது.

மீண்டும் வருகிற பாக்கியலட்சுமி
அதன்படி, ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாக்கியலட்சுமி சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக இருப்பது தற்போது டிவி வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. வரும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேபோல் காலை 9 மணிக்கு தென்றல் வந்து என்னை தொடும் தொடரும் ரீ-டெலிகாஸ்ட் ஆகிறது.
எப்போது தொடங்கியது
பாக்கியலட்சுமி சீரியல் முதன்முதலாக 2020 ஜூலை 27 ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. குடும்ப பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுத்த இந்த சீரியல், குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் 2020களின் மிக முக்கியமான குடும்ப சீரியல்களில் ஒன்றாக மாறியது. டி.ஆர்.பி. பட்டியலில் தொடர்ந்து டாப் இடங்களில் இருந்த இந்த தொடர், அதன் நீண்ட பயணத்திற்குப் பிறகு கடந்த வருடத்தில் நிறைவடைந்தது.
ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக வாழ்ந்து கொண்டிருந்த பாக்கியா, கணவரின் துரோகம் காரணமாக வாழ்க்கையில் எதிர்கொண்ட அவமானங்கள், அதிலிருந்து அவள் எழுந்த விதம், சுயமரியாதை, தன்னம்பிக்கை, தனி அடையாளம் - இவை எல்லாம் தான் இந்த தொடரின் மையக்கரு.
"குடும்பத்துக்காக வாழ்ந்த ஒரு பெண்... ஒரு கட்டத்தில் 'நானும் வாழ வேண்டும்' என்று முடிவு எடுத்தால் என்ன நடக்கும்?" என்ற கேள்விக்கான பதிலாக இந்த தொடர் அமைந்தது.
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா கதாபாத்திரத்தில் சுசித்ரா, கோபி கதாபாத்திரத்தில் சதீஷ்குமார், ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி போன்ற பலரும் நடித்திருந்தனர்.
குறிப்பாக கோபி - பாக்கியா - ராதிகா ட்ராக் ரசிகர்களிடையே மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. "கோபி மீது கோபம்... பாக்கியாவுக்கு ஆதரவு" என்ற அளவுக்கு இந்த தொடரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களின் வாழ்க்கையிலேயே ஒரு பகுதியாக மாறின.
மீண்டும் ஒளிபரப்பு
இன்றைய காலத்தில் ஓடிடி ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், காலை நேர டி.ஆர்.பியை உயர்த்தும் முயற்சியாக விஜய் டிவி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வேலைகள் முடிந்து அமைதியாக சீரியல் பார்க்கும் பெண்கள், குடும்ப ரசிகர்கள் - இவர்களை மீண்டும் டிவி பக்கம் கொண்டு வர இந்த ரீ-டெலிகாஸ்ட் பெரிய உதவியாக இருக்கும் என சேனல் தரப்பு நம்புகிறது.
ரசிகர்களின் ரியாக்ஷன்
பாக்கியலட்சுமி மீண்டும் ஒளிபரப்பாகிறது என்ற செய்தி வெளியானவுடன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகமாக பதிவுகள் போட தொடங்கியுள்ளனர். "மீண்டும் பாக்கியாவை பார்க்கலாம்", "கோபி ட்ராக்கை மீண்டும் ரசிக்கலாம்" என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications