‘தமிழ்நாடு, தமிழ்ப் புரோகிராம், தமிழ்ப் பொண்ணு’... சர்ச்சையில் சிக்கிய ரித்விகா!
தமிழ்ப்பெண்ணான ஜனனி இறுதிச்சுற்று வரை வரவேண்டும் எனப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ரித்விகா.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் தமிழ்ப்பெண் தான் இருக்க வேண்டும் எனப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ரித்விகா
பிக் பாஸ் சீசன் 2வில் தற்போது மொத்தம் ஆறு பெண் போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ரித்விகா, வைஷ்ணவி மற்றும் ஜனனி மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற மூவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் நடிகை ஐஸ்வர்யா இறுதிச்சுற்று வரை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவரது உடை, பழக்கவழங்கள் மற்றும் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் பல்வேறு பிரச்சினைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

இறுதிச்சுற்று:
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 தொடங்கி ஐந்து வாரங்கள் ஓடி விட்ட நிலையில், நேற்று ஜனனி, பொன்னம்பலம் மற்றும் ரித்விகா ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, இறுதிச்சுற்று பற்றிய பேச்சு வந்தது. அப்போது, ‘கடந்தமுறை பைனலில் பெண் போட்டியாளர்கள் யாரும் இடம் பெறவில்லை. இம்முறை அப்படி இருக்கக் கூடாது' என்றார் ரித்விகா.

ரித்விகாவின் கருத்து:
கூடவே, ‘நிச்சயம் பைனலில் தமிழ்ப் பெண் ஒருவர் இடம் பெற வேண்டும் என்பது தான் தனது ஆசை என்றும், அது ஜனனியாக இருந்தால் மகிழ்ச்சி என்றும்' அவர் தெரிவித்தார். கடந்த நிகழ்ச்சியைப் பார்த்த அவர், இந்த முடிவோடு தான் இம்முறை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததாகக் கூறினார்.

ஜனனியும், ரித்விகாவும்:
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தமிழ்ப்பெண்கள் ஜனனி, வைஷ்ணவி மற்றும் ரித்விகா தான். இவர்களில் வைஷ்ணவி தவிர மற்ற இருவருமே இதுவரை அதிகம் சர்ச்சைகளில் சிக்காமல் அனைவரிடமும் நல்ல பெயர் பெற்று திறமையாக விளையாடி வருகின்றனர். எனவே நிச்சயம் அவர்களில் ஒருவர் இறுதிவரை செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கண்டனங்கள்:
ஆனால், நேற்று தமிழ்ப் பெண்கள் குறித்த ரித்விகாவின் பேச்சு அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. அவர் ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் மும்தாஜைப் பற்றித் தான் அப்படிப் பேசியதாகத் தெரிகிறது. இதனை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலர் கண்டித்துள்ளனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இப்படி அடுத்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறக்கூடாது என எண்ணுவது நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே பார்முலா:
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் பொன்னம்பலம் தமிழ்ப் பெண்கள் பற்றி பேசி வருகிறார். அவருக்கு மக்களிடையே தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவது வாராவாரம் அவர் எலிமினேசனுக்கு சென்றும், மக்களால் காப்பாற்றப்பட்டு வருவதன் மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, தற்போது அதே பார்முலாவை வெற்றிக்காக ரித்விகா மற்றும் ஜனனியும் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications