எவிக்சன்.. 5 பேருமே முக்கியம்... பிக் பாஸ் எடுத்த '6வது' முடிவு!
வைஷ்ணவிக்கு தனிமைச் சிறை தண்டனையை அளித்துள்ளார் பிக் பாஸ்
சென்னை: கடந்த வாரம் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த ஐந்து போட்டியாளர்களுமே முக்கியமானவர்கள் என்பதால், யாரையுமே வீட்டை விட்டு வெளியேற்றாமல், வைஷ்ணவிக்கு தனிமைச் சிறை தண்டனையை அளித்துள்ளார் பிக் பாஸ்.
பிக் பாஸ் சீசன் 2வில் கடந்த வாரம் மும்தாஜ், பொன்னம்பலம், மஹத், யாஷிகா மற்றும் வைஷ்ணவி என ஐந்து பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். தற்போது வீட்டில் உள்ள 12 பேரில் இந்த ஐந்து பேருமே சர்ச்சைகளுக்குப் பேர் போனவர்கள். இதற்கு முந்தைய வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவருமே, நித்யாவைத் தவிர அதிக சர்ச்சைகளில் சிக்காதவர்கள்.
ஆனால், இம்முறை நாமினேட் ஆனவர்கள் ஐந்து அப்படியில்லை. பெரும்பாலும் இவர்களை வைத்து தான் வீட்டில் பெரும்பான்மையான பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே, இவர்களில் யாரை வெளியேற்றினாலும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைய வாய்ப்புள்ளது.

ரகசிய சிறை:
இப்போது தான் பிக் பாஸ் வீட்டில் அதிரடி ரகளை என கச்சேரி களை கட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் இவர்களில் யாரையும் வெளியேற்ற பிக் பாஸ் விரும்பவில்லை போலும். இதனால், வைஷ்ணவியை பிக் பாஸ் வீட்டிலேயே மற்ற போட்டியாளர்களுக்குத் தெரியாமல் ரகசிய சிறையில் அடைத்துள்ளார்.

கடந்த சீசனிலும்:
கடந்த சீசனிலும் இதேபோல், சுஜா வருணி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரைப் பற்றி மற்ற போட்டியாளர்கள் என்ன பேசுகின்றனர் எனத் தெரிந்து கொண்டார். இதனால் மீண்டும் வீட்டிற்குள் வந்ததும் அவரது நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது.

மாற்றிப் பேசும் போட்டியாளர்கள்:
ஆனால், இம்முறை அப்படியில்லை. வைஷ்ணவி வீட்டில் இருந்தவரை அவரைப் பற்றி புறணி பேசியவர்கள், அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார் எனத் தெரிந்ததுமே அப்படியே பேச்சை மாற்றிப் பேசினர். இதனை கமலும் கூட சுட்டிக் காட்டினார். கடந்தவாரம் அவரை புறணி பேசுபவர் என்றவர்கள் கூட, அது அவரின் உரிமை என்பது போல் நியாயப்படுத்தி பேசினர்.

மக்கள் கருத்து:
காரணம் அவர் வெளியில் சென்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பைப் பார்ப்பார் என்ற முன்னெச்சரிக்கை தான். ஆரம்பம் முதலே முதல் சீசனை மனதில் வைத்து ஜாக்கிரதையாக போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். எனவே வைஷ்ணவியை தனிமைச் சிறையில் அடைத்தாலும், அவரைப் பற்றி பரபரப்பாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்பது தான் மக்களின் கருத்து.












Click it and Unblock the Notifications