'நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட..’ ரித்விகாவை ஒதுக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் வீட்டில் நடுநிலை போட்டியாளராக இருந்து வருகிறார் ரித்விகா.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் நேர்மையான போட்டியாளராக யாருக்கும் எதிரியாகவும் இல்லாமல், தோழியாகவும் இல்லாமல் நடுநிலையானவராக இருந்து வருகிறார் ரித்விகா.
முதல் வாரத்தைத் தவிர இன்று வரை நாமினேட் செய்யப்படாதவராக இருந்து வருகிறார் ரித்விகா. காரணம் நடுநிலையானவராக, நேர்மையானவராக அவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்வது தான்.
பிக் பாஸ் வீட்டில் நுழைந்தபோதே, 'கடந்த சில மாதங்களாக என் படங்கள் வெளியாகவில்லை. அதனால் தான் இங்கு வந்திருக்கிறேன்' என பளிச்சென நேர்மையாக தனது நோக்கத்தைப் போட்டுடைத்தவர் ரித்விகா.
தமிழ்ப்பொண்ணு சர்ச்சை:
தொடர்ந்து அதே போன்று பிக் பாஸ் வீட்டிலும் மனதில் பட்டதை சரியான நேரங்களில் வெளிப்படுத்தி வருகிறார். தமிழ்ப் பொண்ணு இறுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டும் எனக் கூறியதைத் தவிர வேறு சர்ச்சைகள் எதிலும் சிக்காதவர்.
சந்தேகம்:
யாரிடமும் மனம் விட்டுப் பேசி நெருங்கிய தோழியாக இன்னும் மாறாமல் இருப்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. சமயங்களில் இவர் நடிக்கிறாரா எனத் தோன்றும் அளவிற்கு பாராட்டினால் கூட, மிகவும் தன்னடக்கமாக யாருக்கு என்ன வந்தது என்ற கணக்கில் இருக்கிறார்.
பாராட்டு:
ரித்விகாவின் இந்த நடவடிக்கைகளாலேயே பிக் பாஸ் வீட்டில் அதிக அன்பையோ அல்லது கோபத்தையோ சம்பாதிக்காத போட்டியாளராக அவர் தொடர்ந்து வருகிறார். நேற்று கமலைச் சந்தித்து போட்டியாளர்கள் தங்கள் நண்பர் மற்றும் எதிரி பற்றிக் கூறிய போது கூட, யாருடைய வாயில் இருந்தும் ரித்விகாவின் பேர் வரவில்லை. கமலும் கூட ரித்விகாவின் வெளிப்படையான பதிலைப் பாராட்டினார்.
பார்க்கலாம்:
ஆனால் இந்த நிலை இப்படியே தொடர பிக் பாஸ் அனுமதிப்பாரா எனத் தெரியவில்லை. நல்லவரை ஒரே வாரத்தில் கெட்டவராகவும், கெட்டவரை ஒரே நாளில் நல்லவராகவும் மாற்றும் வகையில் திரைக்கதையை மாற்றுவதில் வல்லவர் அல்லவா பிக் பாஸ். எனவே, இதே போன்று அவரின் ஆசைப்படியே இறுதிச்சுற்று வரை பிக் பாஸ் வீட்டில் ரித்விகா இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.