பிக் பாஸ் 3: காரித் துப்பிய லாஸ்லியா.. கொலைகாரியாக மாறிய வனிதா... செத்து செத்து விளையாடும் சாக்ஷி!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்காக வித்தியாசமான டாஸ்க் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
முதல் வாரம் சோகத்தை பிழிந்து எடுத்த போட்டியாளர்கள், கடந்த வாரம் நமது காதே அவுட் ஆகும் அளவிற்கு குழாயடிச் சண்டை போட்டு அதகளம் பண்ணினர். இப்படியே போனால் ரசிகர்கள் கோபமாகி சேனலை மாற்றி விடுவர் என தெரிந்து கொண்ட பிக் பாஸ், இந்த வாரம் வித்தியாசமான டாஸ்க் ஒன்றை லக்சுரி பட்ஜெட்டுக்காகக் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த சீசன்களில் பார்த்த பேய் விளையாட்டு தான் என்றாலும், இம்முறை வனிதாவை கொலைகாரியாக்கி இருப்பது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கிறது. எப்போதும் சண்டைக்காரியாகவே பார்த்துப் பழக்கப்பட்ட வனிதாவை, கொலைகாரியாக பார்க்க கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அவரும், எப்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவராகப் போட்டுத் தாக்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பதால், வீட்டில் சண்டை சத்தமும் கொஞ்சம் குறைந்துள்ளது.
நேற்றைய எபிசோட்டிலும் வழக்கம் போலவே ஆட்டம் பாட்டத்துடன் போட்டியாளர்கள் நாளைத் துவக்கினர். பின் மீரா அனைவருக்கும் யோகா என்ற பெயரில் ஏதோ சொல்லிக் கொடுத்தார். இந்த வாரம் அபிராமி தான் கேப்டன் என்பதால், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். காரணம் அடுத்த வாரம் நம்மைத் தான் டார்க்கெட் செய்து நாமினேட் செய்வார்கள் என பயத்தில் இருந்தவருக்கு, தலைவர் பதவி பாதுகாப்பு கவசமாக மாறியுள்ளது.
வழக்கம் போல், கவின் லாஸ்லியாவிடம் வலியச் சென்று கதைத்துக் கொண்டிருந்தார். பாத்ரூமில் பல் துலக்க வந்த பெண்ணிடம் விடாமல் பேசிக் கொண்டிருந்தார். பின் குளிக்கச் செல்ல விடாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக லாஸ்லியாவும் புதிய டாஸ்க் எல்லாம் கொடுத்துப் பார்த்தார். ஆனால், கவின் சளைக்காமல் தரையைப் பார்த்து பேசியபடியே இருந்தார்.
குளிக்கப் போன மகளை நீண்ட நேரம் காணாததால் பொறுப்பான தந்தையான சேரன் பாத்ரூமுக்கே தேடி வந்து விட்டார். பிறகு கவினை செல்லமாக திட்டி விட்டு, மகளை ஒரு வழியாக அவரிடம் இருந்து காப்பாற்றினார்.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் பிக் பாஸ் இந்த வார லக்சுரி டாஸ்க்கிற்கான கான்செப்ட்டை அறிவித்தார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரையாக அழைத்து டாஸ்க்கில் அவர்களது கேரக்டர் பற்றி விளக்கினார். கோபக்காரரான வனிதாவிற்கு கொலைகாரி வேடம். அவரும் சந்தோசமாக இதெல்லாம் எனக்கு ஜுஜுபி என அடுத்தடுத்து எளிதாக சாக்ஷியையும், மோகன் வைத்யாவையும் கொலை செய்தார். வனிதாவிற்கு கூட்டாளி முகென். சாக்ஷி போட்டிருந்த மேக்-அப்பை அழிக்கச் செய்து அவரை கொலை செய்தனர். அடுத்ததாக மோகன் வைத்தியாவை மைக்கேல் ஜாக்சன் போல ஆடவைத்து அவரையும் கொன்றனர்.
இந்த டாஸ்கிற்காகவே பிக் பாஸ் வீட்டில் சுடுகாடு போன்ற செட்டப்பை உருவாக்கி, அதில், பேய் போன்ற பொம்மைகளையும் தொங்க விட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களுக்கு பேய் காஸ்ட்யூம் வேறு. பேயாக மாறியவர்களுக்கே தங்களை யார் கொலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. நிச்சயம் இதைக் கண்டுபிடிக்கும் போலீஸ் வேலையையும் யாருக்காவது பிக் பாஸ் கொடுப்பார் எனத் தெரிகிறது.
சரவணன், சாண்டி, தர்ஷன் என ஆளாளுக்கு கையில் ஒரு ஆயுதத்துடன் வீட்டுக்குள் சுற்றி வருவது காமெடியாக இருக்கிறது. பேய் போல மேக்கப் போடச் சொன்னதுக்கு பதில், மேக்கப்பே இல்லாமல் இருங்கள் எனக் கூறி இருக்கலாம். அது இன்னும் பயங்கரமான பயத்தை ஏற்படுத்தியிருக்கும்.
பிக் பாஸ் தொடர்பு கொள்வதற்காக வனிதாவிற்கு மட்டும் ஒரு செல்போன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தான் பிக் பாஸ் அடுத்து யாரைப் போட்டுத் தள்ள வேண்டும் என கட்டளையிடுகிறார். நேற்றைய எபிசோட்டில் எல்லாம் சுபமாகத்தான் சென்றது. இனி நிச்சயம் அதிலும் ஏதாவது கலகமூட்டி பிக் பாஸ் அரசியல் செய்வார் என எதிர்பார்க்கலாம்.